| ADDED : ஜூன் 07, 2024 12:41 AM
திருப்பூர், ஜூன் 7-நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் வீதி பாலத்தில் வாகனப் போக்குவரத்து தடை செய்வது குறித்து ஆய்வு நடந்தது.திருப்பூர் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்டப் பாலம் கட்டும் பணி மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. ஈஸ்வரன் கோவில் வீதியையும், யூனியன் மில் ரோட்டையும் இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஒரு பாலம் உள்ளது.பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், ஸ்திரத்தின்மை குறைந்து விட்டது. பாலத்தின் இருபுறங்களிலும் ரோடு உயரப்படுத்தப்பட்டது; பாலம் தாழ்வாக மாறி விட்டது. இந்த காரணங்களால் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.கட்டுமானப் பொருட்கள் ஒரு புறம் குவிக்கப்பட்டது. ஆற்றுக்குள் துாண்கள் அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், மூன்று முறை வெள்ளம் பெருக்கெடுத்து, கட்டுமானப் பணி நிறுத்தி வைத்து மீண்டும் துவங்கியது.தற்போது இப்பணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய பாலம் மீது வாகனப் போக்குவரத்து தடை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நேற்று காலை மாநகராட்சி பொறியியல் பிரிவினர், போக்குவரத்து பிரிவு போலீசார் பாலம் அமைந்துள்ள இடத்தில் ஆய்வு செய்தனர்.----திருப்பூர், ஈஸ்வரன் கோவில் ரோடு நொய்யல் பாலம் மீது வாகன போக்குவரத்து தடை செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
என்ன சிக்கல்?
ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் போக்குவரத்து நிறைந்த பகுதி. நகரின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் வளர்மதி பாலம் வழியாக செல்கிறது. அதே சமயம் காங்கயம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் வளம் பாலம் வழியாகவும், தாராபுரம் ரோடு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஈஸ்வரன் கோவில் பாலம் வழியாகவும் தான் செல்கின்றன.அவ்வகையில், ஈஸ்வரன் கோவில் அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில், போக்குவரத்து தடை செய்தால், வாகனங்கள் அனைத்தும் வளம் பாலம் வழியாகவே செல்ல வேண்டும். அதற்காக, செல்லாண்டியம்மன் துறை ரோடு, ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழா ரோடு ஆகிய இரண்டு ரோடும் முழுமையாக சீரமைப்பு செய்ய வேண்டும்.அப்போது மட்டுமே இவ்வழியாக வாகனப் போக்குவரத்து எளிதாக அமையும். இதற்கான நடவடிக்கை முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன தொடர்ச்சியாகவே, பாலம் மீது போக்குவரத்து தடை செய்வது குறித்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.