| ADDED : டிச 03, 2025 06:15 AM
திருப்பூர்: கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில், திருவண்ணாமலையின் மீது மஹா தீபம் ஏற்றி வைத்து வழிபடப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து கோவில்களிலும் மஹா தீபம் ஏற்றப்படுகிறது; வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும், கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும், கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து, வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக, மண் அகல் விளக்குகளை வாங்கி, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் வைப்பதையே தமிழக மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதற்காக, ஒவ்வொரு ஆண்டும், புதிய மண் அகல் விளக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இன்று மாலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளதால், கடந்த சில நாட்களாக, திருப்பூரில் அகல்விளக்கு விற்பனை களைகட்டியது.