திருப்பூர் : விலை குறைந்து, விற்பனையும் மந்தமாக உள்ளதால், லாரிகளில் பெரிய வெங்காய மூட்டைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.புத்தாண்டு பிறந்தது முதல் பெரிய வெங்காயம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. கடந்தாண்டு இறுதியில், கிலோ, 50 முதல், 80 ரூபாய் இருந்த பெரிய வெங்காயம், பொங்கல் பண்டிகையின் போது, கிலோ, 40 ஆக குறைந்தது. கடந்த ஒரு வாரமாக, 25 முதல், 35 ரூபாய் என்ற நிலைக்கு வந்து விட்டது.விலை குறைந்து, விற்பனை மந்தமாகிய நிலையில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளதால், அதிகளவில் வெங்காயம் தேக்கமாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து மொத்தமாக ஆர்டர் செய்த பெரிய வெங்காயத்தை, என்ன செய்வது என தெரியாமல், மொத்த வியாபாரிகள் தடுமாறுகின்றனர்.வெளிமாநிலங்களில் இருந்து நேற்று, திருப்பூர் தென்னம்பாளையத்துக்கு, லாரிகளில் வந்த வெங்காயங்களை, குடோனில் இருப்பு வைக்க முடியாமல், அப்படியே மொத்தமாக பிற ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் பழைய, புதிய வெங்காயத்தை தனித்தனியே இடமிருக்கும் வரை, வேறுவேறு குடோனில் பிரித்து இறக்கினர்.வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், பெரிய வெங்காயம் விற்பனை மந்தமானது. பள்ளி, கல்லுாரி விடுதிகள், ஓட்டல்கள் செயல்பட துவங்கி, வழக்கமாக, மொத்தமாக வாங்கி செல்வோர் வந்து விட்டால், வெங்காய இருப்பு குறைந்து விடும். லாரிகளில் இருந்து சரக்கு இறக்கப்பட்டு குடோன்களில், இருப்பு வைக்கப்படும்,' என்றனர்.