உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் கடைக்காக நடையாய் நடை ;பொங்கல் பரிசு புறக்கணித்த மக்கள்!

ரேஷன் கடைக்காக நடையாய் நடை ;பொங்கல் பரிசு புறக்கணித்த மக்கள்!

திருப்பூர்:நடமாடும் ரேஷன் கடை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், பொங்கல் பரிசை புறக்கணித்ததாக, வெள்ளகோவில் அடுத்த அனுமந்தபுரம் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, வேப்பம்பாளையம், அனுமந்தபுரம் கிராமங்களில், 160 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பகுதிநேர ரேஷன் கடை வேப்பம்பாளையத்தில் அமைந்துள்ளது; அனுமந்தபுரம் மக்கள், ரேஷன் பொருள் வாங்க, மூன்று கி.மீ., தொலைவு சென்று வர வேண்டியுள்ளது. பஸ் வசதியில்லாததால், ஏழைகள் ரேஷன் கடை சென்றுவர முடியாத நிலை தொடர்கிறது. நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர்.பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், கடந்த, மாதம் 8ம் தேதி, ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தனர். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் புறக்கணித்துள்ள தங்களுக்கு, நீதி வழங்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் நேற்று, கலெக்டரிடம் முறையிட வந்திருந்தனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனுடன் சென்று, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அவர்கள் கூறுகையில், ''தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழகத்திலேயே, எங்களை அகதிகளாக மாற்றிய அதிகாரிகளை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளோம். இனியாவது, எங்களுக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்றனர்.

கலெக்டர் உறுதி

கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, ''அனுமந்தபுரம் மக்கள், தொலைவில் உள்ள வேப்பம்பாளையம் பகுதி நேர கடைக்கு சென்றவர சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அனுமந்தபுரத்தில், பகுதிநேர கடை அமைக்க வாய்ப்புள்ளதா என, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கேட்டிருக்கிறோம். இல்லாதபட்சத்தில், நடமாடும் ரேஷன் கடை வசதி செய்து கொடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ