| ADDED : பிப் 22, 2024 02:35 AM
தாராபுரம்,:சிகிச்சை பெற்று வந்தவர் பலியானதால், தாராபுரத்தில் குடிபோதை மறுவாழ்வு மையத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம், களிமேட்டை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், 39, குடிபோதைக்கு அடிமையானவர்.இவரை, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், கள்ளிமந்தையை சேர்ந்த கார்த்திகேயன், 36, என்பவர் நடத்தி வரும் வெற்றி லைப் கேர் பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்தில் பிப்., 15ம் தேதி சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், மணிகண்டன் உடல் நிலை கடுமையாக பாதித்தது. தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.இதை தொடர்ந்து தாராபுரம் வருவாய் துறையினர், மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, உடுமலை சரக மருத்துவ ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், மறுவாழ்வு மையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.இதில் துறை சார்ந்த உரிய அனுமதியின்றி, அந்த மையம் இயங்கியது தெரிய வந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த, 33 குடி நோயாளிகளை தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.போதை மறுவாழ்வு மையத்தை பூட்டி 'சீல்' வைத்தனர். 'துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டு, மறுவாழ்வு மையம் நடத்திய கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.