| ADDED : ஜன 31, 2024 11:53 PM
பல்லடம் : பல்லடம் அருகே நண்பனை கடத்தி பணத்தை அபகரிக்க முயன்ற சம்பவத்தில், போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், 8 பேர் தலைமறைவாகஉள்ளனர்.பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்த ஜெயபால் மகன் கவுதம், 25; பேக்கரி உதவியாளர். கடந்த, 4 ஆண்டுக்கு முன் விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட இவருக்கு, 25 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் ஒப்புதல் ஆனது.இது குறித்து தகவல் அறிந்த இவரது நண்பர்கள், பணத்தை இவரிடமிருந்து பறிக்க திட்டமிட்டனர். முதல் கட்டமாக தற்போது, 11 லட்சம் வங்கி கணக்கில் வந்தது. பணம் வந்ததை அறிந்த நண்பர்கள், பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.தொடர்ந்து, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கவுதமை மிரட்டி பெற்றுக்கொண்டு வங்கிக்கு அழைத்து சென்றனர். பணம் எடுத்த பின் மேலும் பணம் வேண்டும் என்று கூறி கத்தி, அரிவாளுடன் மிரட்டியதுடன், நாரணாபுரத்தில் உள்ள ரூமில் அவரை அடைத்து வைத்தனர். மீண்டும் திருப்பூர் வங்கி கிளைக்கு பணம் எடுக்க கவுதமை அழைத்து சென்றனர்.வங்கிக்கு சென்ற கவுதம் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் இது குறித்து தெரிவிக்க, செக்யூரிட்டி மூலம் வங்கி மேலாளருக்கு தகவல் சென்றதை தொடர்ந்து, வங்கிக்கு வந்த திருப்பூர் போலீசார், கவுதமின் நண்பர்களை பிடிக்க முயன்றனர். இதில், இருவர் தப்பி ஓட, ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த பிரகாஷ், 25 என்பவர் கைது செய்து விசாரிக்கின்றனர்.மேலும், உடன் வந்த ராஜூ, வெங்கடேசன் உட்பட 8 பேர் தலைமறைவாக உள்ளனர். நண்பனிடமே பணம் பறிக்க முயன்ற கும்பலின் செயல் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.