.திருப்பூர் : ''காங்கிரஸ் கமிட்டியில் திருப்பூர் மாவட்டத்துக்கு பொறுப்பு
நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை,'' என ஈரோடு மாவட்ட காங்., தலைவர் பழனிசாமி
தெரிவித்தார்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட
தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கோவை புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன்
முன்னிலை வகித்தார். மாநகர துணை தலைவர் ரத்தினமூர்த்தி வரவேற்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்ப நிலை
குறித்தும், டில்லியில் நடந்த நிர்வாக மாறுதல் ஆலோசனை குறித்தும்
விளக்கப்பட்டது.திருப்பூர் மாநகர காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜன், கோவை
புறநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன்,
முன்னாள் துணை மேயர் செந்தில்குமார் உட்பட வட்டார, நகர நிர்வாகிகள்
60க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:காங்கிரஸ் நிர்வாக
அமைப்பில், திருப்பூர் மாவட்டம் இதுவரை சேர்க்கப்படவில்லை. திருப்பூர்
மாவட்ட எல்லையில் வரும் பகுதிகள், கோவை புறநகர் மற்றும் ஈரோடு தெற்கு
மாவட்ட பகுதிகளாகவே தொடர்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
ஒப்புதலுடன், மாநில தலைவர்களும், மத்திய, மாநில தலைவர்களின் ஒப்புதலுடன்
வட்டார, நகர நிர்வாகிகளும் நியமிக்கப்படுகின்றனர்.புதிய திருப்பூர்
மாவட்டத்துக்கு பொறுப்பு தலைவர்கள் என கட்சி மேலிடம் யாரையும்
நியமிக்கவில்லை. கடந்த வாரம் டில்லி சென்று, நால்வர் குழுவுடன்
விவரிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில்
தலைவர் நியமிக்கப்படுவார் என்றும், அதுவரை தற்போதுள்ள நிர்வாகிகளே தொடர்வர்
என்றும் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகள்
தேர்வு செய்யப்படும் வரை, தற்போதைய வட்டார, நகர, மாநகர நிர்வாகிகள்
பொறுப்பில் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மத்திய நிர்வாகிகளின்
ஆலோசனையை விளக்க, திருப்பூரில் வட்டார, நகர நிர்வாகிகளின் அவசர ஆலோசனை
கூட்டம் நடந்தது. தலைவி சோனியா உடல்நலம் பெறுவதற்காக, கிராமங்கள்தோறும்
சிறப்பு வழிபாடு நடத்தவும், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை செய்யவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.