| ADDED : ஜூலை 31, 2011 11:16 PM
திருப்பூர் : தொழில் நகரான திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகளவில்
உள்ளது. முக்கிய ரோடுகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே
காணப்படுகின்றன. போக்குவரத்துக்கு ஏற்ப, வாகன ஓட்டிகளின் அசுர வேகம், மது
அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறலால் விபத்துகள் எண்ணிக்கை
அதிகரித்துவருகிறது. சரக்குகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டிய மினி ஆட்டோ,
டெம்போ போன்ற வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது, விபத்துகளை மேலும்
அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. மற்ற வாகனங்களை விட குறைந்த வாடகை,
அதிகமானோர் பயணிக்கலாம் என்பதால், திருப்பூரில் பெரும்பாலான விசேஷங்கள்,
கட்சி கூட்டங்கள் என அனைத்து தேவைக்கும் சரக்கு வாகனங்களே வாடகைக்கு
அமர்த்தப்படுகின்றன. சில வர்த்தக நிறுவனங்களும் லாபம் கருதி, தங்களது
சரக்கு வாகனங்களிளேயே ஊழியர்களை கம்பெனிக்கு அழைத்து வருவது, வீடுகளில்
கொண்டு விடுவதற்கு பயன்படுத்துகின்றனர். ஆடு, மாடுகளை போல்
நெருக்கியபடியும், சரக்குகளின் மேல் அமர்ந்து, தொங்கிக்கொண்டு
பயணிப்பதால், திருப்பூரில் விபத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்
வாய்ப்புள்ளது.ஆட்களை ஏற்றிக்கொண்டு மேடுபள்ளங்களை பொருட்படுத்தாமல்
அதிவேகமாக செல்வதால், சரக்கு வாகனங்களில் பயணிப்போர் கீழே விழுந்து
விபத்தில் சிக்கும் அவலமும் தொடர்கிறது. டெம்போ, லாரிகளில் மணல், ஜல்லி
உள்ளிட்ட சரக்குகள் மீது அமர்வதால், எதிர்பாராதவிதமாக மின்கம்பங்கள் மீது
உரசி, தீக்கிரையாகும் சூழல் உள்ளது. சரக்கு வாகனங்களில் ஆட்கள் பயணிப்பதை
போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.