| ADDED : ஜன 28, 2024 12:10 AM
திருப்பூர்:போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கைகள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சி.ஐ.டி.யு., சார்பில் சிறப்பு பேரவை ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடந்தது.தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சு நடத்திய அரசு தரப்பில் தொழிலாளர் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் நேற்று திருப்பூர், பார்க் ரோட்டிலுள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.திருப்பூர் மண்டல செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். விரைவு போக்குவரத்து கழக சங்க பொது செயலாளர் கனகராஜ், ஈரோடு மண்டலம் ஜான்சன் கென்னடி, சம்மேளன நிர்வாகிகள் முருகையா, வேளாங்கண்ணிராஜ் உட்பட பலர் பேசினர்.இதில், ஓய்வு பெற்றோருக்கான டி.ஏ., உயர்வு குறித்த வழக்கு விசாரணை வரும், 6ம் தேதி நடக்கவுள்ளது. இதில் சுப்ரீம் கோர்ட் வழங்கும் உத்தரவு அடிப்படையில், 7ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.அந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில தலைமை அறிவிப்பின்படி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், ஈரோடு, திருப்பூர் மண்டல எஸ்.இ.டி.சி., ஊழியர் சங்கம், ஓய்வு பெற்றோர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவை மண்டல செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.