திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில், தை மாத பவுர்ணமியையொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலையையே அருணாசலேஸ்வரராக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் பவுர்ணமி தோறும், திருவண்ணாமலையிலுள்ள மலையை சித்தர்கள், ஞானிகள், மகான்கள் வலம் சென்று, அருணாசலேஸ்வரரை வழிபடுவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால், சித்தர்கள், மகான்கள், ஞானிகளின் ஆசியும், அருணாசலேஸ்வரரின் அருளாசியும் கிடைக்கும் என, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.தை மாத பவுர்ணமி திதி நேற்று முன்தினம் இரவு, 10:44 மணி முதல், நேற்றிரவு, 11:56 வரை இருந்தது. இந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், பல லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்றனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோயிலில், 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.