ஆம்னி பஸ் - கார் மோதல் 28 பயணியர் படுகாயம்
விராலிமலை: ஆம்னி பஸ் - கார் மோதிய விபத்தில், 28 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 43 பயணியரை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்னை சென்று கொண்டிருந்தது. பஸ்சை, தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த முகமது அன்சாரி, 38, ஓட்டினார். இந்த பஸ் விராலிமலை அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இ.மேட்டுப் பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த 'ஹுண்டாய் கிரெட்டா' கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கார் மற்றும் ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தன. காரை திருச்சியை நேர்ந்த பரத்குமார், 27, ஓட்டி வந்துள்ளார். ஆம்னி பஸ்சில் இடிபாடுகளில் சிக்கிய பயணியரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், 23 முதல், 62 வயது வரையிலான, 28 பேர் காயமடைந்தனர். விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.