உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தி.மு.க.,வில் சஸ்பெண்ட் நிர்வாகிகள் உதயநிதி கூட்டத்தில் பங்கேற்பால் சர்ச்சை

தி.மு.க.,வில் சஸ்பெண்ட் நிர்வாகிகள் உதயநிதி கூட்டத்தில் பங்கேற்பால் சர்ச்சை

திருச்சி:தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டிய விவகாரத்தில், ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். எம்.பி.,யின் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின், செஷன்ஸ் நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வழக்கு பதிவு

இந்த விவகாரத்தில், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களுமான முத்துசெல்வம், ராமதாஸ், காஜாமலை விஜய் மற்றும் அந்தநல்லுார் யூனியன் சேர்மன் துரைராஜ் ஆகியோர், தி.மு.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், திருச்சி பார்லிமென்ட் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் நடந்தது.அந்த கூட்டத்தில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் காஜாமலை விஜய், சேர்மன் துரைராஜ் பங்கேற்றனர். இது, திருச்சி தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரவு

இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:ஒழுங்கு நடவடிக்கையாக தான் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்படி இருக்கையில், அதையெல்லாம் மீறி, எப்படி ஆலோசனை கூட்டத்தில், அதுவும் கட்சியின் இளைஞரணி செயலர் உதயநிதி பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது ஆச்சர்யமாக உள்ளது.தி.மு.க., தலைமை உத்தரவிட்டு, பொதுச்செயலர் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த உத்தரவு இவர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால், கட்சி தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு என்ன மரியாதை என்று தெரியவில்லை.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை