விழுப்புரம்: விழுப்புரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை 'தீரன்' சினிமா பாணியில், போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.விழுப்புரம் பகுதியில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தது.அதனைத் தொடர்ந்து எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், பாண்டியன், ஏட்டுகள் மகாராஜா, சக்திவேல், அபிஸ், இளங்கோவன், இப்ராகிம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதில், வழிப்பறியில் ஈடுபட்டது உத்தரபிரதேச மாநில கொள்ளையர்கள் என்பது தெரிய தெரிய வந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கடந்த 15ம் தேதி, உத்தரப்பிரதேசம் சென்றனர்.அங்கு அம்ரோஹா மாவட்டத்தில் பதுங்கியிருந்த, ராய்ப்பூரைச் சேர்ந்த சதாப், 35; முரதாபாத் மாவட்டம், கஜிபுராவை சேர்ந்த இர்பான்,42; ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் கூட்டாளியான டில்லி, ராஜிவ் நகர், பிளாக் ஹவுரியைச் சேர்ந்த அமீர்உசேன் மகன் அலாவுதீன்அலி, 27; என்பவரை டில்லியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ளை விசாரணை செய்து, சவரன் நகை, ரூ.1.40 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.பின்னர் மூவரையும் நேற்று விழுப்புரம் அழைத்து வந்தனர். அவர்கள் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிக்கியது எப்படி?
கொள்ளையர்கள் மூவரும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களில் இவர்களின் மொபைல் போன் உரையாடல்கள் ஒத்து போனதால் மூவரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.இவர்கள் மீது டில்லி, ஆந்திரா, உ.பி., மற்றும் தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன.இவர்களை கைது செய்ய உ.பி., மாநிலம் அம்ரோஹோ மாவட்டத்திற்கு சென்ற தனிப்படை போலீசாரை, தீரன் சினிமா பட பாணியில், அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த மாநில போலீசார் உதவியுடன் மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.