| ADDED : மே 30, 2024 05:15 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டவரை பாட்டிலால் குத்தியவர்களை, கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் புகார் அளித்தனர்.இது குறித்து, விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மனைவி பவானி, 51; தனது, உறவினர்களுடன், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் பிரகாஷ்ராஜ்,22; பி.ஏ., படித்து முடித்து, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 26-ம் தேதி, விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், பிரகாஷ்ராஜ் சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கும்போது, கடை உரிமையாளரான சசிக்குமாருக்கும், எனது மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் சசிக்குமார் மற்றும் அவரது கடை ஊழியர்கள் சேர்ந்து, எனது மகனை தகாத வார்த்தையால் திட்டி, பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த பிரகாஷ்ராஜ், உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, சசிக்குமார் உள்ளிட்டோர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.