உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இனி எந்த பதவியும் வேண்டாம் விரக்தியில் பேசிய ஜனகராஜ்

இனி எந்த பதவியும் வேண்டாம் விரக்தியில் பேசிய ஜனகராஜ்

விழுப்புரத்தில் நீண்டகாலமாக எம்.எல்.ஏ., சீட் வழங்காமல் ஏமாற்றத்தில் உள்ள மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், இனி எந்த பதவியும் வேண்டாம் என விரக்தியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்ட செயலர் பதவிக்காக நீண்டகாலமாக போராடி வரும் எம்.எல்.ஏ., லட்சுமணன், தான் தி.மு.க.,வில் இணைந்த காலத்திலிருந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட செயலர் புகழேந்தி மறைவுக்கு பிறகு, அந்த பதவிக்காக தலைமையிடம் நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால், அமைச்சர் பொன்முடி தனது அரசியல் சாணக்கியத்தால், அவரது மகன் கவுதமசிகாமணிக்கு மாவட்ட செயலர் பதவியை வாங்கிகொடுத்துள்ளார். மறுபுரம், இடைத்தேர்தல் வாய்ப்புக்காக, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் தீவிரம் காட்டினர். ஆனால், அமைச்சர்கள் நேரு, துரைமுருகன் ஆதரவாளரான சிவாவுக்கு சீட் அறிவிக்கப்பட்டது.இதனால், மாவட்ட செயலர் பதவி, இடைத் தேர்தல் வாய்ப்புக்கு எதிர்பார்த்திருந்த முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே, தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரம் அறிவாலயத்தில் நடந்தது.குறிப்பாக, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தனக்கு எம்.எல்.ஏ., சீட் வழங்காததை, பல கூட்டங்களில் நகைச்சுவையாக விமர்சித்து வருவது வழக்கம். அப்படி, இந்த கூட்டத்திலும் அவர் பேசியதாவது; கடந்த 1989ம் ஆண்டு முதல் அமைச்சர், பொன்முடியுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறேன். கடந்த 1991ல் வைகோ பிரிந்த இக்கட்டான நேரத்தில், சிறப்பாக செயல்பட்டு கட்சியை காப்பாற்றியவர் பொன்முடி. என்னை போன்ற பலருக்கு பதவியை வழங்கியவர். அமைச்சரை விட கவுதமசிகாமணி சிறப்பாக செயல்படக்கூடியவர். நான் யாருக்கும் ஐஸ் வைத்து பேசவில்லை. இனி எந்த பதவியும் எனக்கு வேண்டாம். தேவையும் இல்லை, வந்தால் ஏற்கவும் போவதில்லை என விரக்தியோடு பேசி முடித்தார்.பிறகு பேசிய மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நான் 5 தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அனுபவம் மிக்கவன். எனக்கு வருத்தம் இல்லை என்றார். பிறகு பேசிய எம்.எல்.ஏ., லட்சுமணன், லோக்சபா தேர்தல் வெற்றியை மட்டும் சுருக்கமாக பேசிவிட்டு அமர்ந்தார். இவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் பொன்முடி, நீண்டகாலம் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு தான் பதவி வழங்கியுள்ளனர். யார் எதை பேசினாலும் பரவாயில்லை, தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ