| ADDED : ஜூலை 16, 2024 11:57 PM
வானுார் : திருச்சிற்றம்பலம் (இரும்பை ரோடு) மின்துறை அலுவலகம் முதல் கோட்டக்கரை கிராமம் சந்திப்பு வரை முக்கிய இடங்களில் மின்விளக்குகள் பொருத்தாததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.வானுார் தாலுகா, இரும்பையில் இருந்து கோட்டக்கரை செல்லும் சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக புதுச்சேரி மாநிலமான ஆலங்குப்பம், சஞ்சீவிநகர் மற்றும் ராயப்பேட்டை, ஆப்பிரம்பட்டு, ராயப்புதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இது மட்டுமின்றி இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலுக்கும், ஆரோவில் பகுதிக்கும் செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மின்துறை அலுவலகம் முதல் இரும்பை வரையும், இரும்பை முதல் கோட்டக்கரை வரையும் சாலையோரம் மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படும்.இப்பகுதியில் மின் விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி முழுதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், இப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. எனவே, இந்த சாலையில் மின் விளக்குகள் பொருத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.