| ADDED : ஆக 23, 2024 07:15 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் பெண்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அறை முன்பு நேற்றிரவு 7.00 மணிக்கு பெண்கள் சிலர், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 7.30க்கு வந்த தாலுகா போலீசார், தர்ணா செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது,திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்தலாவடியில், நாங்கள் மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ளோம். இங்கு, கடந்த 15ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில், வட்டார வளர்ச்சி, சமூக நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.புதிதாக தேர்வாகிய நிர்வாகிகளிடம், பழைய நிர்வாகிகள் வரவு, செலவு கணக்கு உட்பட எந்த பொருப்புகளையும் வழங்காமல் காலம்கடத்தி வருகின்றனர். நாங்கள் கேட்டால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுகின்றனர்.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் எங்களை கடந்த 7 நாட்களாக அலைக்கழித்து வருகின்றனர். கலெக்டரிடம் பேசி, இதற்கு ஒரு முடிவு தெரியாமல் நாங்கள் செல்ல மாட்டோம் என கூறினர்.இதை கேட்ட போலீசார், கலெக்டர் தற்போது இல்லை நாளை காலை வந்து கலெக்டரை சந்தித்து, மனுகொடுங்கள் என கூறியதை கேட்டு, அந்த பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.