| ADDED : பிப் 22, 2024 07:09 AM
மயிலம் : மயிலத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டுமென எம்.எல்.ஏ., சிவகுமார் சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மயிலம் பா.ம.க., எம்.எல்.ஏ. சிவகுமார் பேசியதாவது எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம், ரெட்டணை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மயிலம், வல்லம், ஒலக்கூர் ஒன்றியங்களில் வசிக்கும் கிராம மக்கள் செஞ்சி, திண்டிவனம் தாலுகா அலுவலகம் செல்லுவதற்கு நீண்டதுார போக வேண்டியுள்ளது. எனவே மயிலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அறிவிக்கவேண்டும்.மயிலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுக்கா மருத்துவமனையாக அறிவிக்கவேண்டும். தொகுதிக்குட்பட்ட தீவனூரில் இருந்து மயிலம் வரை செல்லும் சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி மேம்பாடு செய்ய வேண்டும்.ஆலகிராமத்தில் உள்ள தொண்டியாற்றில் புதியதாக பாலம் கட்டப்பட வேண்டும். பேரணி பெரியதாச்சூர், நெடி, ரெட்டணை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டும். மயிலம் தொகுதியில் உள்ள கீழ் மாம்பட்டு, ரெட்டணை சாலையை இரு வழி சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.இது போன்று பேரணி, பெரியதச்சூர் இடையே உள்ள சாலையை மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் பேசினார்.முதலமைச்சர் ஸ்டாலின், சிவக்குமார் எம்.எல்.ஏ.வின் கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் மயிலம் தொகுதியின் கோரிக்கைகள் அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.