| ADDED : நவ 21, 2025 07:03 AM
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அன்று அதிகாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பூசாரிகள் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நள்ளிரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. உற்சவத்தில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., சரவணன் சரவணன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, வேலுார், புதுச்சேரி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் ,சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.