| ADDED : ஆக 15, 2024 05:22 AM
விருதுநகர் : கல்வியாண்டின் காலாண்டு தேர்வு அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பின் தங்கிய பள்ளிகளுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களது தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகளை சிவப்பு மண்டல பள்ளிகளாக அறிவித்து அப்பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்கியதாக கருதி வாரந்தோறும் ஆய்வு நடத்தவும் அவற்றில் தேவையான கற்றல் வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 26 பள்ளிகள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 15 பள்ளிகள் என 41 பள்ளிகள் பின்தங்கிய பள்ளிகளாக சிவப்பு மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளி மாணவர்களை மேம்படுத்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது தேர்வு நடத்தி மாணவர்களின் தேர்ச்சி நிலையை கண்காணிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.90 சதவீத்திற்கு கீழ் சிவப்பு மண்டலம் என்றால் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளி ஆண் மாணவர்கள் 89 சதவீதத்திற்கு தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களின் கல்வியை மேம்படுத்துவதும் அவசியமாகி உள்ளது. மாணவர்களின் கவன சிதறலுக்கு காரணமான ஜாதி, போதை உள்ளிட்ட விஷயங்களை கண்காணிப்பதும் அவசியம். மாணவர்களின் தேர்ச்சியை மேம்படுத்த கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: பின்தங்கிய பள்ளிகளுக்கு சிறப்பு கவனம் கொடுப்பது என்பது மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையின் சிறப்பு முயற்சி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி செயல்பாடு ஆய்வு செய்யப்படும். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் கற்றல் மேம்பாட்டுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும், என்றார்.