அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அன்பு நகரில் குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகையில் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், தெருக்களில் நுழைந்தால் வெறி நாய்கள் விரட்டி கடிப்பதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டை சேர்ந்த அன்பு நகரில் 10 தெருக்கள் உள்ளன. நகரின் ஒரு சில பகுதிகளில் குப்பையை குவித்து தீ வைக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவஸ்தை படுகின்றனர். நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கூட, குப்பையை நகராட்சியின் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் இந்த பகுதிலேயே தீ வைத்து விடுகின்றனர். தினமும் இவ்வாறு எரிப்பதால் கண் எரிச்சல் ஏற்படுவதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.5 வது தெரு வழியாக செவல் கண்மாய்க்கு செல்லும் மழைநீர் வரத்து ஓடை பராமரிப்பு இல்லாமல் கழிவு நீர் சேர்ந்தும் குப்பை கொட்டப்பட்டும் சுகாதார கேடாக உள்ளது. இதில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. இந்த தெருவில் வாறுகால் அமைக்க வேண்டும். 8வது தெருவில் ரோடு, வாறுகால் இல்லை. இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அமைக்க வேண்டும். 3வது தெருவில் ரோடு இல்லாமல் மேடும், பள்ளமுமாக இருப்பதால் வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். மழை காலங்களில் சேறும், சகதியுமாக நடக்க முடியவில்லை. இந்த தெருவில் தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் செல்ல சிரமமாக இருப்பதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.அன்பு நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் வருகின்றவர்கள், பள்ளி மாணவர்களை விரட்டி கடிக்கிறது. கூட்டமாக வெறி நாய்கள் திரிவதால் பயத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் உருவாகி பல ஆண்டுகள் ஆன போதிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். சுவாச கோளாறு
ஹேமா, குடும்ப தலைவி : அன்பு நகரின் ஒரு சில பகுதிகளில் குப்பையை மொத்தமாக கொட்டி தீ வைப்பதால் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மூச்சு திணறல். கண் எரிச்சலால் நாங்கள் அவதிப்படுகிறோம். குப்பையை எரிக்காமல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் இங்கு குப்பையை எரிப்பது தொடர் கதையாக உள்ளது. வாறுகால் இல்லை
ஜெயந்தி, குடும்ப தலைவி : அன்பு நகர் 3 வது தெருவில் வாறுகால் வசதி இல்லை. கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. ரோடு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் நடக்க முடியவில்லை. தெரு விளக்கு இல்லாமலும் சிரமப்படுகிறோம். நாய்கள் தொல்லை
கணேசன், நெசவாளர்: அன்பு நகரில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இவற்றில் பல வெறிபிடித்து உள்ளது. தெருக்களில் வருபவர்களை விரட்டி கடிக்கிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியில் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. பள்ளி மாணவர்கள் பயந்து கொண்டே தான் பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. இந்தப் பகுதியில் நாய் கடிக்கு ஆளானோர் அதிகமானவர்கள் உள்ளனர்.