| ADDED : மார் 30, 2024 06:09 AM
விருதுநகர், : மக்களால் பேசப்படும் தலைவராக பழனிசாமி மாறிவிட்டார் என விருதுநகரில் ஊழியர்கள் கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.., பேசினார். .விருதுநகரில் நடந்த அ.தி.மு.க.,வின் ஊழியர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ராஜன் செல்லப்பா பேசியதாவது: எண்ணற்ற திட்டங்களை தமிழகம் முழுவதும் நான்கு ஆண்டுகளில் தந்தவர் பழனிசாமி. இப்போது மக்களால் பேசப்படும் தலைவராக மாறிவிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கிறார். 6 சட்டசபை தொகுதிகள் இணைந்த இந்த லோக்சபா தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். நமக்கு நல்ல வேட்பாளர் கிடைத்துள்ளார். வெற்றி பெற வேண்டிய களப்பணி நம்முடையது. பழைய புள்ளி விவரங்களை பொறுத்த வரையில் மிக குறைவான ஓட்டு வித்தியாசத்தில் இழந்துள்ளோம். என்றார்.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: களத்திலே அ.தி.மு.க.,வுக்கு தான் பெரிய ஆதரவு உள்ளது. தே.மு.தி.க., உடனான கூட்டணி ஜெயலலிதா துவங்கியது. ராசியான கூட்டணி. தி.மு.க., கட்சி கூட்டணி கட்சியினரை கண்ணியத்துடன் நடத்தும் கட்சி கிடையாது. வைகோ எவ்வளவு பெரிய மனவேதனையில் உள்ளார் என்பது எனக்கு தெரியும். எங்களுடன் சேர்ந்த கட்சிகளெல்லாம் தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மன்றத்திலும் அங்கீகாரம் பெற்றுள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் சொத்து வரி, மின் கட்டணம் உயர்ந்து விட்டது என்றார்.வேட்பாளர் விஜயபிராபகர் பேசியதாவது: என் தந்தை விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து மதுரையில் வளர்ந்து சென்னையில் ஸ்டார் ஆனார். நான் சென்னையில் பிறந்து மதுரை, விருதுநகர் வந்துள்ளேன்.தே.மு.தி.க., கூட்டத்தில் இருக்கும் அதே பாசமும், அன்பும் எனக்கு அ.தி.மு.க., கூட்டத்தில் கிடைத்துள்ளது. என் வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இளைஞர்களே நீங்கள் உங்கள் அம்மா, அப்பாவிடம் கோபப்பட வேண்டாம். அவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும். நான் எம்.பி., ஆனால் சிவகாசி பட்டாசு பிரச்னையை தீர்ப்பேன். துளசி வாசம் மாறினாலும் மாறும், தவசியின் பிள்ளை நான் வாக்கு மாறவே மாட்டேன், என்றார்.