உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உதவித்தொகை ரூ.48 லட்சம் கையாடல் கணக்கில் வராத ஊழியரிடம் விசாரணை

உதவித்தொகை ரூ.48 லட்சம் கையாடல் கணக்கில் வராத ஊழியரிடம் விசாரணை

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் செம்பட்டியை சேர்ந்த ஒருவரை வருவாய்த்துறையினர் முதியோர் உதவி தொகை திட்டத்தில் பணத்தை அனுப்பும் பணியில் ஈடுபடுத்தினர். இவர் ஒப்பந்த ஊழியரும் கிடையாது; அரசு பணியும் கிடையாது. 'கணக்கில் வராத' ஊழியர். ஆனால், முதியோர் உதவி தொகையை பயனாளர்களுக்கு அனுப்பும் பணியை இவர் தான் செய்தார். கடந்த 2019 முதல் 2024 வரை பயனாளிகளில் இறந்தவர்களின் பெயரை அகற்றாமல், அவர்கள் வங்கி கணக்கை மட்டும் தன் சொந்த, தெரிந்தவர்களின் வங்கி கணக்காக மாற்றியுள்ளார். அந்த கணக்குகளுக்கு முதியோர் உதவித்தொகையை தொடர்ந்து வரவு வைத்துள்ளார். எந்த அதிகாரியும் இதை கவனிக்கவில்லை. தற்போதைய சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி, இறந்தவர்களின் பெயரை அகற்றிய போது அதில் அதிகம் இருந்தது. ஒரு தாலுகாவில் ஒரு மாதத்தில் மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளனரா என்று சந்தேகப்பட்டு ஆய்வு செய்த போது, இறந்த தேதி, ஆண்டு வித்தியாசம் இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் தணிக்கை செய்தார். இதில், 48 லட்சம் ரூபாயை அந்த கணினி உதவியாளர் கையாடல் செய்தது தெரிந்தது. மாவட்ட நிர்வாகம் அவரது வங்கி கணக்கில் இருந்த, 15 லட்சத்தை முடக்கியது.சம்மந்தப்பட்ட நபரிடம் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இன்னும் வழக்கு பதியவில்லை. இதில், பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஒப்பந்தப்பணியில் கூட இல்லாத, அலுவலகத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத தனிநபருக்கு தாசில்தாரின் ஐ.டி., பாஸ்வேர்ட் தரப்பட்டுள்ளது. நடப்பதை ஆண்டுக்கு ஒரு முறை கூட எந்த தாசில்தாரும் ஆய்வு செய்யவில்லை. இதனால் முறைகேடு தடையின்றி நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் மட்டுமின்றி, அரசு பண விஷயத்தில் அசட்டையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்