| ADDED : ஆக 14, 2024 12:37 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.1964ல் கட்டப்பட்ட தற்போதைய பஸ் ஸ்டாண்ட்டில் இடநெருக்கடி காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில் டிரைவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் எதிர்கால போக்குவரத்து மற்றும் மக்கள் நலன் கருதி சிவகாசி ரோட்டில் நகராட்சி உரக்கிடங்கு இருந்த இடத்தில் தற்போது 6 ஆயிரத்து 750 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.36 பஸ்கள் நிற்கும் வசதி, ஹோட்டல், வாகன காப்பகம், நவீன சுகாதார வளாகம், 67 கடைகளுடன் கட்டப்படும் இப்புதிய பஸ் ஸ்டாண்டில், தற்போது கடைகள் கட்டுமான பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடக்கிறது. முதலில் ரூ.13 கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டிருந்த நிலையில், நான்கு வழிச்சாலை ரோடு உயரமானதால், பஸ் ஸ்டாண்டின் தரைத்தளம் உயர்த்தி அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதிகபட்சம் 6 முதல் 10 மாதங்களுக்குள் பணிகள் முடிந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வருமென நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.