உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அனைத்து கிராமங்களிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுக்க எதிர்பார்ப்பு

 அனைத்து கிராமங்களிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுக்க எதிர்பார்ப்பு

மாவட்டத்தில் ஊராட்சிகளில் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தின் மூலமாகவும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதே சமயத்தில் அனைத்து வீடுகளுக்கும் தனித் தனியாக வீட்டு குழாய் இணைப்பதற்காக மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 2022- - 23 ல் ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கும் பணியை துவங்கியது. அந்தந்த கிராமத்தில் திட்ட மதிப்பிற்கு ஏற்றபடி 5 முதல் 10 சதவீதம் மக்கள் பங்களிப்பு தொகையுடன் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பின்னர் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக மேல்நிலை குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. ஆனால் பெரும்பான்மையான ஊராட்சிகளில் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. சிவகாசி ஒன்றியத்தில் தேவர்குளம், பள்ளபட்டி. உள்ளிட்ட ஒரு சில ஊராட்சிகளில் ஒரு ஆண்டிற்கு முன்பு வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் வழக்கம் போலவே அப்பகுதி கிராம மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். அதே சமயத்தில் ஒரு சில கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்கு என முறைகேடாக பணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து முறையாக ஆய்வு செய்து, அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுத்து முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !