| ADDED : டிச 30, 2025 06:13 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் அரசு பஸ் விபத்துக்கள் அதிகரித்து வருவதை தடுக்க, பணியின் போது டிரைவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து உறுதி மொழி எடுக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நடந்த விபத்திலும், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே நடந்த விபத்திலும் 20 பேர் வரை உயிரிழந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் விபத்திற்கு உள்ளாகி வருவது தொடர்கதையாக ஏற்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் பஸ்கள் இயக்கத்தின் போது டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பணியின் போது அலைபேசி பயன்படுத்த மாட்டேன், ப்ளூடூத், ஹெட் செட் பயன்படுத்த மாட்டேன், பஸ்களில் பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படும் வகையில் ரேடியோ ஒலிபரப்புகள் பயன்படுத்த மாட்டேன். கவன சிதறல் ஏற்படுத்தும் வகையில் பயணிகளிடம் பேசிக் கொண்டே பஸ்சை இயக்க மாட்டேன். பயணிகள் ஏறி இறங்கும் கதவுகள் அடைத்து பாதுகாப்பாக இயக்குவேன். அவ்வப்போது பஸ்களில் ஏற்படும் குறைபாடுகளை பராமரிப்பு பதிவேடுகளில் பதிவிட்டு அதனை முழுமையாக சரி செய்ய நடவடிக்கையை மேற்கொள்வேன். பஸ் ஸ்டாண்டில் அவ்வப்போது பஸ் டயர்களின் காற்றழுத்தம் சரியாக உள்ளதா எனவும், பட்டன்களில் உள்ள சிறு கற்களை அகற்றி டயர் சேதங்களை தவிர்த்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பேன் எனவும் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பஸ் டிப்போகளிலும் காலையில் பஸ்கள் கிளம்பும் முன்பு டிரைவர்களை அழைத்து கிளை மேலாளர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர். விருதுநகரில் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்துாரில் கிளை மேலாளர் ரவி, சிவகாசியில் கிளை மேலாளர் மாரியப்பன் , காரியாபட்டியில் கிளை மேலாளர் சீனிவாசன் தலைமையில் ,தலைமையில் நேற்று காலையில் டிரைவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.