| ADDED : ஜன 22, 2024 04:34 AM
சிவகாசி: வெம்பக்கோட்டை பகுதியில் சுற்று கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மினி பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டையில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். விஜய கரிசல்குளம், வனமூர்த்தி லிங்கபுரம், கோமாளிப்பட்டி, இந்திரா நகர், கண்டியாபுரம், எழுவன் பச்சேரி, இனாம் மீனாட்சிபுரம், விளாமரத்துப்பட்டி, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக வெம்பக்கோட்டை உள்ளது. இக் கிராமங்கள் அனைத்தும், சுற்றிலும் 8 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த கிராமங்களுக்கு இதுவரையிலும் அரசு பஸ் வசதி இல்லை. வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், வங்கி, உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தவிர பட்டாசு ஆலைகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் பல்வேறு தேவைகளுக்கும் இங்கு வருகின்ற மக்கள் பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து வெம்பக்கோட்டைக்கு வர வேண்டியுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் கட்டணம் செலுத்தி வர வசதியின்றி நடந்தே வருகின்றனர். எனவே வெம்பகோட்டையில் இருந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.