| ADDED : ஜன 25, 2024 04:46 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் நீண்ட கால குடிநீர், பாதாளசாக்கடை திட்டங்கள் தொடர்பான பணி ஆய்வு கூட்டங்களுக்கு அரசியல் புள்ளிகளின் ஆதரவு பெற்றதாலேயே ஒப்பந்ததாரர்கள் பலர் வருவதில்லை. இதனால் தீர்வு எட்டப்படாமலே பணிகள் முடிவடைவதில் தாமதம் நீடித்து வருகிறது.மாவட்டத்தில் பாதாளசாக்கடை பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார் ஆகிய நகராட்சிகளில் நடந்து வருகிறது. பழைய தாமிரபரணி குடிநீர் திட்டத்தால் குறைந்த அளவே குடிநீர் கிடைப்பதை கருத்தில் கொண்டு புதிதாக நகர் முழுவதும் இணைப்பு கொடுத்து வீடுகள் தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் புதிதாக பாதாளசாக்கடை இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில பணிகள் மெதுவாக நடப்பது குறித்து மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.இதனால் நகராட்சி பகுதிகளில் புதிய ரோடு போடும் பணிகளும் தாமதமாகி வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் அளவில் புகார் சென்றதால் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு ஒப்பந்ததாரர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இவர்கள் அரசியல் அதிகார புள்ளிகளின் ஆதரவு மிக்கவர்கள் என்பதாலேயே அதிகாரிகளை மதிப்பதும் கிடையாது. பணிகள் தாமதம் தொடர்பான தெளிவான விளக்கம் அளிப்பதும் கிடையாது. இன்னும் சிலர் தேவையான இயந்திரங்கள் இன்றி பணி செய்ய தொழிலாளர்களை நிர்பந்திக்கின்றனர். இந்த விதிமீறலை கூறியும் கண்டுக்காததால் நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாது இருக்கின்றனர்.மாவட்டத்தில் அனைத்து குடிநீர், பாதாளசாக்கடை தொடர்பான திட்டங்கள் நிர்ணயித்த ஆண்டை காட்டிலும் 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் முழுமை அடையாத சூழல் உள்ளது. ஒப்பந்ததாரர்களை கேட்டால் அரசியல் அதிகார புள்ளிகளின் பெயரை கூறி தப்பி விடுகின்றனர் என அதிகாரிகள் புலம்புகின்றனர்.இதற்கு தீர்வு என்ன என்பதை ஆளும் அரசியல்வாதிகள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் பணியை முடிப்பதில் தாமதம் ஏற்படுத்தும் இது போன்ற ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும்.