| ADDED : ஜூலை 25, 2011 10:18 PM
சிவகாசி : பார்வையற்றவருக்கும் சொத்தில் பங்கு கொடுக்க அவரது சகோதரர்களுக்கு நீதிபதி சுமதி உத்தரவிட்டார். சிவகாசி அருகே அனுப்பங்குளம் பேராபட்டியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை(35). பார்வையற்றவரான இவர் , பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாய் தேவபாக்கியம்(65) உடன் வசிக்கிறார். இவரது குடும்ப சொத்தாக மூன்று வீடு, வெற்றிலையூரணியில் 2.50 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தின் பங்கை அந்தோணி பிச்சைக்கு தராமல் அவரது சகோதரர்கள் அந்தோணி முத்து, அந்தோணி செல்வம், அந்தோணிசாமி, அந்தோணிராஜ் வைத்து கொண்டனர்.
இதன் சொத்து கேட்டு அந்தோணி பிச்சை, தனது தாயுடன் சிவகாசி சப்-கோர்ட் இலவச சட்டப்பணிகள் குழுவில் மனு செய்தார். அதன்படி நீதிபதி சுமதி, சகோதரர்கள் நான்கு பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தார். விசாரணையில், ''சொத்தை பாகபிரிவினை செய்து, அந்தோணி பிச்சைக்கு உரிய பங்கு வழங்கவும், நான்கு சகோதரர்களும் சேர்ந்து மாதம் 1000 வீதம் தாய்க்கு பராமரிப்பு தொகை வழங்கவும்,'' நீதிபதி உத்தரவிட்டார். இதை ச@காதரர்களும் ஏற்றுக்கொண்டனர்.