சிவகாசி : சிவகாசி அருகே பள்ளி மாணவர் கடத்தப்பட்டார். அவரை ஒப்படைக்க பெற்றோரிடம் ரூ.25 லட்சம் கேட்டு கடத்தல்காரர்கள் மொபைல் போனில் மிரட்டி உள்ளனர்.சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாண்டியன், 42. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கோடீஸ்வரன், 14, திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 30ம்தேதி காலையில் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வகுப்பில் மாணவரது புத்தக பை இருந்தது. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை 9.30 மணிக்கு, ரமேஷ்பாண்டியன் மொபைல் போனில் இந்தியில் ஒருவர் பேசினார். இந்தி புரியாததால், இந்தி தெரிந்த நண்பர் சீனிவாசன் மூலம், ஏற்கனவே அழைக்கப்பட்ட மொபைல் போனுக்கு பேசினர். எதிர்முனையில் பேசியவர், '' ரூ.25 லட்சம் கொடுத்தால், மாணவரை விடுவிப்போம்,'' என மிரட்டினார். பின்னர், தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட வங்கியின் கணக்கு எண் 70923 007977718 ஐ கொடுத்து, அதில் ரூ.25 லட்சத்தை செலுத்தக் கூறினார்.மேலும், மதியம் 1.30 மணிக்கு பேசிய நபர், ''வங்கியில் இன்னும் பணம் போடவில்லையா,'' என மிரட்டலாக கேட்டு, மொபைலை சுவிட் ஆப் செய்தார். இதனிடையே , கோடீஸ்வரன் கடத்தல் குறித்து, திருத்தங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.இந்தியில் பேசிய நபர், பீகாரிலிருந்து பேசியதாகவும், வங்கி கணக்கு, மொபைல் எண் பீகாரில் உள்ளது என தெரிகிறது. சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் அதிகளவில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கடத்தலில் இவர்களது தொடர்பு இருக்குமா எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.கடத்தப்பட்ட கோடீஸ்வரன் 2009ல் வீட்டில் கோபித்து கொண்டு, சேலத்தில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றதும், நேற்று முன்தினம் புத்தகம் பைண்டிங் செய்து வாங்குவதற்காக, பெற்றோரிடம் ரூ.230 வாங்கி சென்றதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.