சென்னை: வங்கிகளில் வாங்கிய கடனுக்கு, 'சர்பாசி' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழகத்தில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வாகன உதிரிபாகங்கள், மின் சாதனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள், நடைமுறை மூலதன செலவை சமாளிக்கவும், விரிவாக்க திட்டங்களுக்கும் வங்கிகளில் கடன் வாங்குகின்றன.குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட சேவைகளை பெறும் பெரிய நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் குறித்த காலத்தில் பணம் தருவதில்லை.இதுபோன்ற காரணங்களால், பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன. மூன்று மாதங்கள் தொடர்ந்து, அசல் மற்றும் வட்டியை செலுத்த தவறினால், வங்கிகள் சர்பாசி சட்டத்தின் கீழ், கடன்தாரரின் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.இதனால், தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஆலைக்குள் தண்ணீர் புகுந்ததால், பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு, அரசு தரப்பில் உதவி செய்யப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால், பல நிறுவனங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.மூன்று மாத கடன், அசல் தவணையை செலுத்தவில்லை எனில், வங்கிகள், சர்பாசி சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை எடுக்கின்றன.இந்த நடவடிக்கையால் தொழில் நிறுவனங்கள் முடக்கப்படுகின்றன. இதனால், தொடர்ந்து கடனை கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. நிறுவனங்கள் மீதான மரியாதையும் குறைகிறது.எனவே, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, சர்பாசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.நடவடிக்கை எடுக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்கு பதில், ஆறு மாதங்களாக மாற்றி அமைக்க வேண்டும். கடனை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற மாற்று விதிகளை வகுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.