சென்னை: ''மார்ச்சில் மட்டும், தபால் வாயிலாக, 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன,'' என, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுதும் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்; 45 பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றின் வாயிலாக, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. இதை, பொதுமக்கள் நேரில் பெறுவதை தவிர்க்கும் விதமாக, விரைவு தபாலில் அனுப்பும் பணி, கடந்த பிப்.,28ல் துவங்கியது.அதன்படி, மார்ச்சில் மட்டும், 2 லட்சத்து 51,501 சான்றுகள் அனுப்பப்பட்டதில், 2 லட்சத்து, 48,986 சான்றுகள் உரியவர்களைச் சென்றடைந்தது. விண்ணப்பித்த 99 சதவீதமானோர், அலுவலகத்துக்கு வராமலேயே தங்கள் சான்றுகளை தபாலில் பெற்றுக் கொண்டனர். மீதமுள்ள 1 சதவீத சான்றுகள் மட்டுமே, உரியவர்களை அடையவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், விண்ணப்பத்தில் முகவரியை சரியாகக் குறிப்பிடாமல், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் முகவரியை கொடுத்திருப்பதும், தொடர்பு இல்லாதவர்களின் முகவரியை கொடுத்திருப்பதுமே காரணம்.விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டால் மட்டுமே, அவர்களுக்குரிய சான்று அவரிடமோ; அவரது குடும்ப உறுப்பினரிடமோ ஒப்படைக்கப்படும். தொடர்பில்லாத முகவரியை அளித்திருந்தால், அந்த தபால், சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திரும்பிவிடும்.அத்தகைய நேர்வுகளில், விண்ணப்பதாரர்கள் உரிய தபால் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை, அலுவலகத்தில் ஒப்படைத்தால் மட்டுமே, அவருக்குரிய சான்று மீண்டும் தபால் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். திரும்பப் பெறப்பட்ட தபால்கள், எக்காரணம் கொண்டும் மீண்டும் உரிய நபரிடம் நேரடியாக வழங்கப்படாது. எனவே பொதுமக்கள், தங்கள் சரியான முகவரியை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.