| ADDED : ஜூன் 22, 2024 01:06 AM
சென்னை:விழுப்புரத்தில் சாராயம் குடித்ததால், உடநல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கூலி தொழிலாளி ஒருவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை, கே.கே.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 38; கூலி தொழிலாளி. கடந்த 17ம் தேதி வேலை நிமித்தமாக, விழுப்புரம் மாவட்டம் அந்தியூருக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து, கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார். சென்னை திரும்பிய கிருஷ்ணசாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, டாக்டர்கள் கூறியதாவது:கிருஷ்ணசாமி கள்ளச்சாராயம் குடித்ததால் தான், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். பரிசோதனை முடிவுக்கு பின், உடல்நல பாதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.