சென்னை : 'ஓட்டுக்காக தமிழகத்தையும், தமிழர்களையும் அவதுாறு செய்வதை, பிரதமர் நிறுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேர்தல் பிரசாரத்தில் நாகரிக வரம்பு மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல் திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், தங்கள் ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து, ஓட்டு சேகரிப்பதில் முன்னுதாரணமாக திகழ வேண்டியவர் பிரதமர் மோடி.ஆனால், வெறுப்பு பேச்சுகளின் வழியாக, மக்கள் இடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் துாண்டி வருவது, நாட்டுக்கு நல்லதல்ல. பழிசுமத்திமுன்னதாக உத்தர பிரதேச மக்களை இழித்தும் பழித்தும், தென்னிந்தியர்கள் பேசுவதாக, தமிழக மக்கள் மீது அபாண்டமான பழியை சுமத்தி இருந்தார்.மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களை துாண்டி விடும் செயல் ஆபத்தானது என, ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே, பகையுணர்வை துாண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன்.ஆனால், தமிழக மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தை, மோடி நிறுத்திக் கொள்ளவில்லை.ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர், 'புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள், தமிழகத்தில் இருக்கின்றன' என்று பேசி இருக்கிறார்.இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும், நேசமும் உடைய தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதாகும். ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி உடைய ஒடிசா மக்களை, தமிழக மக்களுக்கு எதிராக துாண்டும் பேச்சல்லவா இது.இரட்டை வேடம்கோவிலின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியை, தமிழக மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா? தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பு ஏன்?தமிழகம் வரும் போது, தமிழ் மொழியை உயர்வாக போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களை போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதுமாக உள்ளார்.ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஓட்டு சேகரிக்கும் போது, தமிழக மக்களை திருடர்களை போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும், அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம்.ஓட்டுக்காக தமிழகத்தையும், தமிழர்களையும், அவதுாறு செய்வதை, பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.