உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானியங்கி வாகன பரிசோதனை அக்., முதல் தமிழகத்தில் அமல்

தானியங்கி வாகன பரிசோதனை அக்., முதல் தமிழகத்தில் அமல்

சென்னை:நேரு யுவகேந்திரா, சென்னை மாநகராட்சி போக்குவரத்து துறை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை மற்றும் குருநானக் கல்லுாரி ஆகியவை இணைந்து, சென்னையில் தேசிய இளைஞர் வாரம் மற்றும் சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தின.அதில், தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது:கடந்த, 2015ல் உலக நாடுகளுக்கு, 17 இலக்குகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக, 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கை பாதியாக குறைய வேண்டும். அதன் அடிப்படையில், மத்திய அரசு மூன்று முடிவுகள் எடுத்துள்ளது. அதில், 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டால், அவற்றை கழிக்க வேண்டும். அந்த நடைமுறை ஓரிரு மாதங்களில், தமிழகத்தில் வந்து விடும். தமிழக அரசின் போக்குவரத்து வாகனங்கள், 10,750 உள்ளன. முதல் கட்டமாக அவற்றில், 15 ஆண்டுகள் கடந்த வாகனங்கள் அழிக்கப்பட உள்ளன. அடுத்ததாக, தானியங்கி பரிசோதனை பிரிவு. தற்போது உள்ள வாகனங்களை, 'பிரேக் இன்ஸ்பெக்டர்'கள் பரிசோதனை செய்கின்றனர். இனி நவீன தொழில்நுட்ப முறையில், இயந்திரங்கள் கொண்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது.முதல் கட்டமாக தமிழகத்தில், 20 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. வரும் அக்., மாதம் முதல், அனைத்து வாகனங்களும் தானியங்கி பரிசோதனை மையத்தின் வாயிலாக பரிசோதனை செய்து, எப்.சி., சான்றிதழ் வழங்கப்படும்.மூன்றாவதாக அனைத்து வாகனங்களுக்கும், அவை இருக்கும் இடம் காட்டும் கருவி பொறுத்தப்பட உள்ளது. இதனால், அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயமாகி விடும். அந்த திட்டமும் தமிழகத்தில் விரைவில் வர உள்ளது. ஓட்டுனர்கள் முறைகேடாகவோ, சமூக விரோத செயலிலோ ஈடுபட்டால், வாகனத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று விடும். அங்கிருந்து வாகனம் எங்கு உள்ளது என அறிந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் பரிமாறப்படும். கடந்த 1974 முதல் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால், சாலைகளின் விரிவாக்க வசதி, 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை