சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகளை ஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை, தனக்கே தலைமை நீதிபதி ஒதுக்கீடு செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார்ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரத்தில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.இந்த உத்தரவுகளை எல்லாம் மறு ஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்பான வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ரமேஷ் ஆஜராகினர். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்படி, தனக்கு தலைமை நீதிபதி ஒதுக்கியிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். நான்கு வழக்குகளையும், வரும் 27, 28, 29 மற்றும் மார்ச் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, மூத்த வழக்கறிஞர்களிடம் நீதிபதி தெரிவித்தார். அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கின் விசாரணை, வரும் 12, 13ம் தேதிகளிலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு, 19 முதல் 22 வரையும் விசாரிக்கப்படும் என, ஏற்கனவே நீதிபதி அறிவித்துள்ளார்.