உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கல்லுாரி மாடியிலிருந்து விழுந்து இறந்த மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு

 கல்லுாரி மாடியிலிருந்து விழுந்து இறந்த மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு

சென்னை: 'மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லுாரி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு, தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள, அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் ரம்யா, 19. இவர் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை, அரசு மகளிர் கலைக் கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2015 அக்., 10ம் தேதி வகுப்பு முடிந்த நிலையில், ரம்யாவும், அவரது வகுப்பு தோழி சண்முகப்பிரியாவும், மதிய உணவு சாப்பிடுவதற்காக கல்லுாரியின் இரண்டாவது மாடிக்கு சென்றனர். அவர்கள் திரும்பி வருவதற்குள், உள்ளே யாரும் இல்லை என நினைத்து, மாடிப்பகுதியின் கதவை, கல்லுாரி காவலாளி பூட்டி சென்றுள்ளார். இதனால் வெளியே வர முடியாமல் தவித்த, இரு மாணவியரும், கட்டடத்தின் ஜன்னல் வழியே, கீழே இறங்க முடிவு செய்தனர். அதன்படி, சண்முகப்பிரியா ஜன்னல் வழியே குதித்து, கீழே இறங்கி விட்டார். ஆனால், ரம்யா தவறி விழுந்து இறந்தார். இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது. வழக்கை நேற்று விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: கல்லுாரி அறைகளின் கதவுகளை மூடும்போது, மாணவியர் யாராவது இருக்கின்றனரா என்பதை, காவலாளிகளும், பேராசிரியர்களும் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். மாணவியர் பாதுகாப்பில், கல்லுாரி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது உறுதியாகிறது. கல்லுாரி கல்வி இயக்குனரகம், உரிய விசாரணை நடத்தவில்லை; இது மனித உரிமை மீறல். எனவே, உயிரிழந்த மாணவி ரம்யா குடும்பத்திற்கு, தமிழக அரசின் உயர்கல்வித்துறை, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்