உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவித்த ஊதிய உயர்வு தாமதம் அமைச்சர் மீது ஆசிரியர்கள் கோபம்

அறிவித்த ஊதிய உயர்வு தாமதம் அமைச்சர் மீது ஆசிரியர்கள் கோபம்

திருச்சி:தமிழக பள்ளிகளில், 2012ம் ஆண்டு தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு, 12,650 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதலில், 7,000 ரூபாய் ஊதியம் அறிவிக்கப்பட்டு, பின் படிப்படியாக உயர்ந்து, அவர்கள் தற்போது, 10,000 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர்.பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்; கடந்த அ.தி.மு.க., அரசும், தற்போதைய தி.மு.க., அரசும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், பணி நிரந்தரம் செய்ய, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்., மாதம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மொத்தம், 11 நாட்கள் நடந்த தொடர் போராட்டத்தின் விளைவாக, முதல் கட்டமாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு, 2,500 ரூபாய் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என்றும், பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் உறுதி அளித்தார்.அதனால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அமைச்சர் மகேஷ் உறுதி அளித்து, மூன்று மாதங்கள் ஆகியும், இன்னும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், மாநிலம் முழுதும் பணியாற்றி வரும், 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் விரக்தி அடைந்துஉள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் செய்யவில்லை, ஊதிய உயர்வு அளிப்பதாக அளித்த உறுதியையும் நிறைவேற்றவில்லை. 'இதுவரை, பொங்கல் போனஸ் ஒரு ஆண்டு கூட வழங்கப்படவில்லை. எங்களின் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஜன 04, 2024 19:57

பகுதி நேர ஆசிரியர் என்று தெரிந்தே தான் வேலையில் சேருகிறீர்கள். தொகுப்பூதியம் என்பதும் தெரியும். அப்படி இருந்தும் சேர்ந்து விட்டு நிரந்தரப் பணி கேட்கிறீர்கள்... பொங்கல் போனஸ் கேட்கிறீர்கள்.. அரசின் வரிப்பணத்தில் 75 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்துக்கே போவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். சரி... இவ்வளவு சம்பளம் வாங்கியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது. உங்கள் பிள்ளைகள் எல்லாம் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்களா? ஏன் தனியார் பள்ளியில் சேர்க்கிறீர்கள்? ஏழை எளிய மக்கள் மட்டுமே படிக்கிற பள்ளிகளில் அதிக சம்பளம் கேட்டு போராடுவது நியாயமா? ஜெயலலிதா ஆட்சியில் இப்படி போராட்டம் நடத்தியது உண்டா? கிடைத்தது போதும் என்று தானே இருந்தீர்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை