| ADDED : டிச 05, 2025 05:07 PM
ஆத்தூர்: திண்டுக்கல் மாவட்டம், மணலூர் விஏஓ முருகன், பட்டா மாறுதலுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் இளையராஜா. கன்னிவாடி அருகே அவருக்கு 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக ஆத்தூர் தாலுகா மணலூர் விஏஓ முருகனை அணுகினார். அதற்கு முருகன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அவர்கள் ஆலோசனைப்படி, விஏஓ அலுவலகத்தில் இளையராஜா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் , இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் முருகனை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.