கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: மாரடைப்பை ஏற்படுத்தும் மரபணு!
சமீபத்தில், எதிர்பாராத விதமாக, மாரடைப்பு ஏற்பட்ட, 35 வயது இளைஞரை அவரது உறவினர்கள் என்னிடம் அழைத்து வந்தனர். புதிய தொழில்நுட்ப உதவியுடன், ரத்தக் குழாயின் உள்பக்கத்தை பரிசோதித்ததில், ரத்தக்குழாயில் அடைப்பு இல்லை; ஆனால், அவருக்கு இருந்த தொடர் புகைப்பழக்கத்தால், கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் உறைந்திருந்தது. இதய ரத்தக் குழாயில் அடைப்பு சிறிது சிறிதாகத் தான் ஏற்படும். புகைப்பழக்கம் இருந்தால், கீறல்கள் ஏற்பட்டு, ரத்தக்குழாயின் உள்பக்கம் ரத்தம் உறைந்து, எதிர்பாராத விதமாக மாரடைப்பு வரும். இதற்கு, 'ஸ்டென்ட்' தேவையில்லை; ரத்த உறைவை, மருந்துகளால் கரைத்து விடலாம். தற்போது, இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவது அதிகரித்து உள்ளது. மது, சிகரெட், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணிகளாக சொன்னால், 'உணவு கட்டுப்பாடு இல்லாத, புகை, மது பழக்கம் உள்ள, 80 வயதைக் கடந்தவர்களுக்கு ஏன் வருவதில்லை?' என்று, என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்கள் கேட்பது வழக்கம். இதில் வயது விஷயம் இல்லை; மாரடைப்பை ஏற்படுத்தாத மரபணு அவர்களுக்கு இருக்கலாம் என்று தான் கூற முடியும்.வரும் முன்...மாரடைப்பு வரக் கூடிய சாத்தியம் உள்ளவர்களில், 50 சதவீதம் பேருக்கு, அறிகுறிகளே இல்லாமல் அல்லது குறைந்தபட்ச அறிகுறிகளுடன், எதிர்பாராத நேரத்தில், தீவிர மாரடைப்பு வரலாம்.இது வருவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் செய்யக் கூடாது என்று ஒட்டுமொத்தமாக சொல்வதை விட, மரபியல் ரீதியில் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களை, தனியாக அடையாளம் காண வேண்டியது முக்கியம். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில், 1000 பேர் வேலை செய்தால், அவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டி என்று மாரடைப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களை, தனியாகப் பிரித்து விட வேண்டும்.இவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு போன்றவற்றை ஆண்டிற்கு ஒருமுறை பரிசோதனை செய்து, கொழுப்பு இருந்தால், உணவு, வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியில், அதிக கொழுப்பைக் குறைக்க முடியாவிட்டால், மாத்திரைகள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.வந்த பின்...அறிகுறிகள் ஏற்பட்ட உடன் மருத்துவ உதவி பெற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் இதைச் செய்கிறோமோ, அவ்வளவு எளிதில், இதய தசைகளின் செயலிழப்பைத் தடுக்க முடியும். ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால், மாரடைப்பு வருவதையே தடுத்து விடலாம்.நடு மார்பில் வலி, அதிகப்படியான வியர்வை, 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை, மாரடைப்பிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு,இதய சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை.healthyheartchennai@gmail.com