கருணைக் கிழங்கில் நோய் பாதுகாப்பு
கருணைக்கிழங்கை நம் உணவில் அடிக்கடி எடுத்துக்கொண்டால், சில வகை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். கருணை கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, காரும் கருணை, காராக் கருணை. முதல் வகை, காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும். சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்து, பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில், காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனால் காரல், நமைச்சல் மட்டுப்படும். ஜீரண மண்டல உறுப்புகளில், சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. ஜீரண சக்தியை துரிதப்படுத்தும்; ஜீரண உறுப்புகளுக்கு பலத்தையும் கொடுக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாள்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நோய்களில், வெள்ளைப்பாடு என்ற நோய்க்கு, கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்த கிழங்கு. உடல் வலி இருந்தால் கூட, போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் லேகியம் தயாரிக்க, இந்த கிழங்கு பிரதானமாக பயன்படுகிறது. காராக் கருணை, பெரிய அளவில் ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்பார்கள். இந்த கிழங்கில் காரல் இருக்காது. இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.