உள்ளூர் செய்திகள்

திட்டுத் திட்டா வருதா தேமல்? இப்போதே விரட்டலாம்!

முகம் அழகாகவும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் பலர் தேமல், சொரி, படையை போக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குளியல் சோப்பை மாற்றினாலும், தேமல் தொல்லை மறைவதில்லை. உடல் அரிப்பும், நமைச்சலும் குறைவதில்லை. அதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டால், அது தற்காலிகமாக மறைந்து மீண்டும் வந்து விடுகிறது. இதற்கு ஒரே வழி, உடலில் இயற்கையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்கிறது இயற்கை மருத்துவம். வெப்ப மண்டல பகுதிகளில் வசிப்போருக்கு, தோல் நோய்கள் அதிகம் வருகிறது. இது பெரியவர் முதல் சிறியவர் வரை, யாரையும் தாக்கலாம். இருப்பினும், இளம்பருவத்தினருக்கே தேமல் அதிகம் வருகிறது. இந்த தேமல் மார்பு, முதுகு, கழுத்து, கை, கால், முகம் போன்ற இடங்களில், வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்று காணப்படும். இந்த பிரச்னை, அதிகமாக வியர்ப்பவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும். இந்த தேமல் பிரச்னைக்கு, என்ன தான் கடைகளில் மருந்துகள் விற்கப்பட்டாலும், சில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. இதோ சில இயற்கை வழிமுறைகள்: துளசி இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன், பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், வெள்ளைத் திட்டுக்கள் மறையும். இளஞ்சூடான தண்ணீரில், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச்சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும். ஆடாதோடை இலையை, தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் வெயிலில் வைத்த பிறகு, தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும். மோரில் முள்ளங்கியை அரைத்து, இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும். ஒரு துண்டு வசம்புடன், பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து, இரவில் பற்றுப் போட்டு வந்தால், நாளடைவில் தேமல் குணமாகும். இந்த மருத்துவக் குறிப்புக்களை செய்து வந்தால், தேமல் மறைந்தே போய்விடும். இக்குறிப்புகளை தொடர்ந்து சில மாதங்கள் செய்தால்தான் பலன் கிடைக்கும். சருமம் வறண்டு போகாமல் இருக்க, எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதிகம் கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை, மருத்துவரின் பரிந்துரையுடன் பயன்படுத்த வேண்டும். ஒரு கப் நீரில் வேப்பிலைகளை சிறிது போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்னைகள் அனைத்தும் தடுக்கப்படும். வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், வெள்ளை திட்டுக்கள் நீங்கும். தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பி12 கிடைக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள் தோலை, பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், வெள்ளை திட்டுக்கள் குணமாகும். தயிரில் மஞ்சள் தூள் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த நீரால் கழுவ வேண்டும். இதன் மூலம் வெள்ளை திட்டுக்களைப் போக்கலாம். புளியங்கொட்டையை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 23 மணிநேரம் ஊற வைத்து, சாதாரண நீரிலோ அல்லது வேப்பிலை நீரிலோ கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்