இரவில் உடற்பயிற்சி செய்தால் ஆபத்து!
யோகா, நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பயிற்சிகளை செய்யலாம். அதில் எளிமையாக அனைவரும் செய்ய முடிந்ததே நடைபயிற்சி. குறிப்பாக, காலையில் நடைபயிற்சி செய்வதால், நம் உடலுக்கு அதிக பலன்கள் உண்டு என்றும், இரவில் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார் ஆயுர்வேத டாக்டர் விஜய்பிரியா. உடற்பயிற்சி குறித்து, டாக்டர் விஜய்பிரியா கூறிய 'டிப்ஸ்' இதோ!* பொதுவாக சூரியன் உதிக்கும் நேரத்தில், உடலின் மெட்டபாலிக் செயல்பாடுகள் அதிகரிக்கும்; சூரியன் அஸ்தமிக்கும் போது அதன் செயல்பாடுகள் குறையும். காலையில் உறங்கிக்கொண்டு இருந்தால், மெட்டபாலிக் செயல்பாடுகள் குறைந்து, நாள் முழுவதும் நம்மை மந்தமாக்கிவிடும். காலையில் உடற்பயிற்சி செய்வதால், உடலின் அனைத்து செல்களிலும் புத்துணர்வு ஏற்படும். *தொடர்ந்து நடக்கும் போது, நமது தசைகள் வலிமை பெறுவதுடன், எலும்பு சார்ந்த சிக்கல்களும் சீராகும். உடற்பயிற்சியின்போது, மூச்சின் வேகம் சற்று அதிகமாக இருக்க வேண்டும். பேசிக்கொண்டு பயிற்சி செய்யக்கூடாது.* வயது முதிர்ந்தவர்களுக்கு மூட்டு வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் இருக்கும். அவர்கள் தங்களால் முடிந்த துாரம், மெதுவாக நடந்தால் போதுமானது.கொழுப்பை கரைக்க, நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உணவு முறைகளையும் சரியாக பின்பற்ற வேண்டும். நடைபயிற்சி என்பது முந்தைய நாள் நாம் உண்ட உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டை கரைக்கும். கொழுப்பை கரைக்க, உணவு பழக்கத்தை மாற்றி நடை பயிற்சி செய்யவேண்டும்.* ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறு காரணமாக, ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்வார்கள். அதுபோன்று அல்லாமல் முதலில், 15 நிமிடம், 25 நிமிடம் என மெதுவாக நேரத்தை அதிகரிக்க வேண்டும்.*இதய பாதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட நோய் உள்ளவர்கள் கட்டாயம் அவரவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். * நடை பயிற்சி முடிந்த பிறகு உடனடியாக குளிக்கவோ, வேலைகளில் ஈடுபடவோ கூடாது. சில நிமிடங்கள் அமைதியாக ஓய்வு எடுத்து, பின் அன்றாட வேலைகளை தொடரலாம்.* காலையில் இயலாதவர்கள் மாலையில் நடைபயிற்சி செய்யலாம். ஆனால், மாலை ஆறு மணிக்குள் செய்வது சிறப்பு. நடைபயிற்சி முடித்தவுடன் மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.ஆகவே, இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்தால் துாக்கம் கெடும்; தவிர பார்வை குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.* உடற்பயிற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள், அலுவலக நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் எழுந்து நடக்கலாம். * செல்லும் இடங்களில் 'லிப்ட்' பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் ஏறுதல் என ஆங்காங்கே உடலுக்கு இயக்கம் கொடுக்கலாம். ஒருவரின் வயது, உடல் பாதிப்பு, நேரம் என திட்டமிட்டு நடை பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம்.இவ்வாறு, மருத்துவர் விஜய்பிரியா தெரிவித்தார்.