உள்ளூர் செய்திகள்

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்!

மலர்கள், மணம் தருவதாக மட்டுமல்லாமல், நோய் தீர்க்கும் காரணிகளாகவும் உள்ளன. இதில், செம்பருத்தி மலர், சிறந்த மருத்துவ குணம் உள்ளது. உடல் உஷ்ணம் அதிகமாகி விட்டால், பலவித உபாதைகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்தி மலர்களை கொண்டு, ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி, குடிநீருக்கு பதில் இதை பயன்படுத்தினால், உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும், இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.அஜீரணக் கோளாறால், வயிறு பாதிக்கப்பட்டு, உட்புறச் சுவர்கள் பாதிக்கின்றன; வாயிலும் புண்கள் ஏற்படும். இவ்வாறு அவதிப்பட்டால், தினமும், ஐந்து அல்லது, பத்து மலர்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால், புண்கள் குணமாகும். செம்பருத்தி இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் வைத்து அருந்தி வந்தால், ரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கி, இருதயத்துக்கு பலம் சேர்க்கிறது.முடி வளர்ச்சிக்கு! சிலருக்கு, தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இதற்கு சரியான மருந்து, செம்பருத்தி தான். செம்பருத்தி இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி, வெந்தயப்பொடி, கறிவேப்பிலை பொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து, தலைக்கு குளித்து வந்தால், தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.செம்பருத்தியை காயவைத்து, பொடி செய்து, காபி, தேநீர் போல கஷாயம் செய்து அருந்தி வந்தால், ரத்தம் தூய்மையடையும்; உடல் பளபளப்பாக மாறும். கோபத்தை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல், செம்பருத்தி, நம்மை பாதுகாக்கிறது.உஷ்ணம் தணியும்: செம்பருத்தி இதழ்களை, அம்மியில் அரைத்து, அரை நெல்லிக்காயளவு உருண்டையாக, பாலுடன் கலந்து, காலை, மாலை தொடர்ந்து, 5 நாட்கள் உட்கொண்டு வர, தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தால் வரும் உடல் உஷ்ணம் தணியும். செம்பருத்தி இதழ்கள், அரை கைப்பிடி, சீரகம் சிறிதளவு, நெல்லி வற்றல் ஒரு கிராம் ஆகியவற்றை, இரண்டு லிட்டர் நீரில், இரவு ஊறவைத்து, மறுநாள், அந்த நீரை அருந்தி வர, உடல் உஷ்ணம் தணியும். செம்பருத்தி இதழ்களை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சியோ அல்லது ஊறவைத்தோ தலையில் தேய்த்து வந்தாலும், சூடு தணியும்.இலைகளை அரைத்து குளிக்கும் போது, முடிக்கு பலத்தை தருகிறது. இளநரை தடுப்பதிலும், முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில், இலைகளும், பூக்களும், முக்கிய இடம் பிடிக்கின்றன. காலையில், செம்பருத்தி இதழ்களை மென்று தின்று நீர் அருந்தி வர, வயிற்றுப்புண் ஆறும்; ரத்தம் சுத்தமாகும்.சிறுநீர் எரிச்சல் தீரும்: காய்ந்த இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர பேன், பொடுகு அகலும். செம்பருத்தி இதழ் தூளுடன், சம அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து, ஒரு தேக்கரண்டி, காலை, மாலை சாப்பிட, ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நோய் குறையும்.சிறுநீர் எரிச்சல் குணமாக, நான்கு அல்லது ஐந்து செம்பருத்தி இலைகளை, இரண்டு குவளை நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி, கற்கண்டு சேர்த்து குடிக்க பலன் தரும். அல்லது, நான்கைந்து செம்பருத்தி இதழ் மொட்டுகளை, இரண்டு குவளை நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்