மூளையை செயலிழக்க செய்யும் வெப்ப வாதம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் தொடர்பான நோய்களில், மூளை, நரம்பு மண்டலத்தைப் பாதித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அவசர நிலையாக 'வெப்ப வாதம்' உள்ளது. உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்கப்படாவிட்டால், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, வெப்பவாதம் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணம் 40 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் உயர்ந்து, அதிகப்படியான வெப்பத்தை உடலால் வெளியேற்ற முடியாத போது, வெப்பவாதம் ஏற்படுகிறது. பொதுவாக, மூளையில் உள்ள, 'ஹைபோதாலமஸ்' எனும் பகுதி, வியர்வை மூலமும், ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலமும் உடலின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. அதிக வெப்பத்தில் இருப்பது, நீர்ச்சத்து குறைபாடு, தொடர்ந்து கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவது போன்ற நேரங்களில், இந்த அமைப்பு செயலிழந்து விடுகிறது. இதன் விளைவாக செல்கள் பாதிக்கப்பட்டு, உடல் முழுவதும் வீக்கம், நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன. சாதாரண தசைப்பிடிப்பில் தொடங்கி, குழப்பமான மனநிலை, தசைப் பிடிப்பு, தீவிர சிறுநீரக பாதிப்பு வரை வரலாம். வெப்ப வாதம் ஒருவரின் மனநிலையைப் பாதிக்கலாம். முதலில் குழப்பம், எரிச்சல், நிதானமின்மையுடன் துவங்கும். தீவிர நிலையில், வலிப்பு, நினைவிழப்பது, உயிரிழப்பும் ஏற்படலாம். உடல் உஷ்ணம் அதிகரிப்பது, நரம்பு செல்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை குலைக்கிறது. செல்களில் உள்ள புரதங்களின் அமைப்பு சிதைகின்றன. மூளைத் திசுக்களில், திரவம் சேர்ந்து, வீக்கம் ஏற்படலாம். மூளைக்கு ஆக்சிஜன், ரத்த ஓட்டம் குறைந்து, ஞாபக மறதி, பக்கவாதம், நினைவிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது, சிறுமூளைப் பகுதி. இதனால் தான், வெப்ப வாதத்தில் இருந்து மீண்டவர்களுக்கு, உடல் இயக்கம் சார்ந்த பாதிப்புகள் தொடர்ந்து இருக்கும். அதிக பாதிப்பு மனநலப் பிரச்னைகள், மனச்சோர்வுக்கு உபயோகிக்கும் சில வகை மருந்துகள் வியர்வையைத் தடுக்கும். இதனால் உடல் வெப்பநிலையை, கட்டுப்படுத்தும் திறன் குறையும். இவர்களைத் தவிர, முதியவர்கள், குழந்தைகள், நரம்பியல் கோளாறு உள்ளவர்களுக்கு அதீத வெப்பத்தால் பாதிப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே பக்கவாதம், மூளை நரம்பு தேய்மானம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு, உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும் அமைப்பு செயல்படாது என்பதால், அவர்கள் எளிதில் வெப்பத்தால் பாதிக்கப்படுவர். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, வெயிலில் அதிகமாக உடற்பயிற்சி செய்வது, வெயிலில் வேலை பார்ப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பவர்கள் வெப்ப வாதத்தால் எளிதில் பாதிக்கப்படலாம். ஆரம்ப அறிகுறிகள் தலைவலி, தலைசுற்றல், குமட்டல், அதிக சோர்வு போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. அதிக உழைப்பால் ஏற்படும் வெப்பவாதத்தில் அதிகமாக வியர்க்க வாய்ப்பிருந்தாலும், பெரும்பாலான வெப்பவாதங்களில் வியர்க்கவே வியர்க்காது. சருமம் சூடாகவும் வறண்டும் காணப்படும். சீரற்ற இதயத் துடிப்பு அதிகரிப்பு, மூச்சு விடுதலில் சிரமம் போன்றவையும் இருக்கும். என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவரை நிழலான, 'ஏசி' அறைக்கு மாற்று வது, இறுக்கமான உடைகளைத் தளர்த்துவது, குளிர்ந்த நீர், ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் தருவது அவசியம். உடலை குளிர்விப்பதில் ஏற்படும் தாமதம் மூளையை பாதிக்கும். நீர்ச்சத்தை ஈடு செய்யவும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் நரம்பு வழியாக திரவங் கள் செலுத்த வேண்டியிருக்கும். வெப்ப வாதம் பாதித்தால், உயிரைக் காப்பாற்ற, மூளையை பாதுகாக்க, ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியம். எனவே அறிகுறிகள் தெரிந்தால், அலட்சியம் செய்யாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். டாக்டர் தீபா அவதானி, மூத்த நரம்பியல் மருத்துவ ஆலோசகர், ஐஸ்வர்யா மருத்துவமனை, சென்னை.98401 05510cc@iswarya.in