உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்...

விவேகா, மதுரை: குழந்தையின்மை பிரச்னைக்கு ஹோமியோபதியில் தீர்வு இருக்கிறதா?மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு, நீர்க்கட்டிகள் (பி.சி.ஓ.டி.), வெரிகோசில், விந்தணுக்கள் குறைபாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்து உணவு சாப்பிடுவது என குழந்தையின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. இயற்கை சாகுபடி முறையில் தயாரான ஆர்கானிக் உணவுகளில் பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் இருக்காது. குழந்தைகளுக்கு ரசாயன மருந்துகள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் விந்தணுக்கள் குறைவு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு, சினைப்பை நீர்க்கட்டிகள், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்னையை சரிசெய்யலாம். பாதுகாப்பான மருந்துகள் மூலம் நோய்களை சரிசெய்து இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தைப்பேறு அடைய உதவ முடியும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள், திரவங்கள் உள்ளன. இம்மருந்துகள் மூலம் ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவை சரிசெய்ய முடியும். விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, வீரியமிக்க விந்தணுக்கள், கருமுட்டைகள் வெளிவரவும் இம்மருந்துகள் உதவும். இதனால் ஹோமியோபதி மருந்துகள் மூலம், குழந்தை இல்லாதோருக்கு இயற்கை முறை கருத்தரிப்பு சாத்தியமாகிறது.- டாக்டர் என்.ஆர்.ஏ. மதுமிதா, ஹோமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.முத்து, திண்டுக்கல்: எனக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் கற்கள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அலோபதி மருந்துகள் எடுத்துக் கொள்ள தயக்கமாக உள்ளது. சித்த வைத்திய முறையில் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு வழி உண்டா?சிறுநீரக கற்கள் உருவாவதற்கு உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. ஏழு மி.மீ.,க்கு குறைவான சிறுநீரக கற்கள் எளிதாக மருந்துகளின் உதவியுடன் கரைவதற்கு வாய்ப்புள்ளது.நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான பீர்க்கங்காய், சுரக்காய், வெண்பூசணி, வாழைத்தண்டு, முள்ளங்கி அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்து அதிகமுள்ள அசைவ உணவுகள் தவிர்ப்பது, தேவையான அளவு நீர் அருந்துவது, இளநீர், மோர் அடிக்கடி அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.சிறுநீரை அடக்காமல் கழிக்க வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் 'நெருஞ்சில் குடிநீர்' என்ற சித்த மருந்து டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழு நிவாரணம் கிடைத்து, மீண்டும் கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வாய்ப்புள்ளது.- டாக்டர் பாலமுருகன், மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திண்டுக்கல்.எஸ். புவனா, சின்னமனுார்: எனது மகனுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை என்ன?பொதுவாக நெஞ்சுக்கு கீழ் மற்றும் அடி வயிற்றுக்கு மேல், இடைப்பட்ட வயிறு பகுதியில் வரும் வலி அல்சராகத் தான் இருக்கும். இதற்கு காரணம் சரியான நேரத்தில் துாங்கி, சரியான நேரத்தில் எழுவதில்லை. இதை தவிர்க்க பேக்கிங் செய்த உணவு வகைகளை சாப்பிட கூடாது. துரித வகை உணவுகள், ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் அருந்த வேண்டும். உடற்பயிற்சி மிகவும் நல்லது. குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். மருந்து மாத்திரைகள் எடுத்தாலும், இந்த பழக்கங்களை பின்பற்றினால் அல்சரை குணப்படுத்த முடியும். கடைகளில் சுயமாக மருந்து மாத்திரை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.- பி. மணிகண்டன், மருத்துவ அலுவலர், ஆரம்ப சுகாதார நிலையம், குப்பனாசாரிபட்டி, தேனி.பாலா, அப்பனேந்தல்: குழந்தைக்கு பல் முளைக்கும் போது காய்ச்சல் ஏற்படுமா. தீர்வு என்ன?பல் முளைப்பதற்கு காய்ச்சல் வராது. பல் முளைப்பதற்கு எச்சில் அதிகம் ஊறலாம். ஈறுப்பகுதி சிவந்து காணப்படலாம். எனவே காய்ச்சல் அதிகமாக இருந்தால் டாக்டரை அணுக வேண்டும். பல் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் சம்பந்தமில்லை.-டாக்டர் ரமீஸ் முகம்மது யூசுப், குழந்தைகள் நல மருத்துவர், அரசு மருத்துவமனை, முதுகுளத்துார்.அன்புச்செல்வி, சிவகங்கை: தைராய்டு பாதிப்பை எவ்வாறு சரி செய்யலாம்?தைராய்டு கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி போன்று இருக்கும் ஒரு சிறிய சுரப்பி. இது சிறியதாக இருந்தாலும் நம் உடல் சீராக இயங்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நமது வளர்சிதை மாற்றம், ஆற்றல் அளவு, இதயத் துடிப்பு, உடல் வெப்பம் மற்றும் முழுமையான வளர்ச்சியைப் பராமரிக்கத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.இந்தச்சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதன் பாதிப்பை உடல் முழுவதும் உணர முடியும். பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது தைராய்டு கோளாறுகளும் அதிகரிக்கின்றன. 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களிடம் 0.7 சதவீதமாக இருக்கும் பாதிப்பு, 35 முதல் 49 வயதுடையவர்களிடம் 3.4 சதவீதமாக உயர்கிறது. வயதாக வயதாக, குறிப்பாகப் பெண்களுக்கு தைராய்டு பிரச்னை வருவது அதிகம் ஏற்படுகிறது. 35 வயதுக்கு மேல் பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.சத்தான உணவை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் போதுமான அளவு துாக்கம் அவசியமாகும். மருத்துவர் ஆலோசனையின்றி தைராய்டு மருந்துகளைத் தாங்களாகவே எடுத்துக்கொள்ள கூடாது. முறையான உடல் பரிசோதனையுடன் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு டாக்டர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை.கி.ராமகிருஷ்ணன் ராஜபாளையம்: என் மகனுக்கு 6 வயதாகிறது. கவனிப்பில் அக்கறையின்றி அலைபேசியே கதி என இருக்கிறான். உணவு கூட அலைபேசியை கையில் கொடுத்தால் தான் உண்கிறான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு உண்டா?சமீப காலமாக இது போன்ற சிக்கல் அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது. வீடியோ பார்ப்பதோ, விளையாட்டோ திரும்பத்திரும்ப பார்க்கும் போது அது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்ற நிலைதான் போதை. இதன்பின் குழந்தைகள் மனநிலை உடல், மனம், படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் போது கோபம், ஆத்திரம், வன்மம் சிறுவயதிலேயே அதிகரித்து முற்றிய நிலையில் தற்கொலை வரை செல்கிறது.முதலில் இது பெற்றோர், ஆசிரியர் கையில் உள்ளது. குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குவதுடன் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது, அவர்களுக்கு பிடித்த இசை, கவிதை, விளையாட்டு, ஓவியம், குடும்பத்துடன் வெளியே செல்வது என ஏதோ ஒன்றில் அவர்களை மடை மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் மனோபாவத்திற்கு ஏற்றபடி ரசிக்கும் வகையில் கற்பித்தல் பணி இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் செயலிகளை கண்காணித்து தடை செய்யும் பட்சத்தில் மாணவர்களை சிக்கலிலிருந்து மீட்கலாம்.- டாக்டர் அர்ஜூனன், மனநல மருத்துவர், சேத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !