கேள்வி பதில்
என் உறவினர் ஒருவருக்கு காச நோய். கடந்த பல மாதங்களாக சிகிச்சையில் உள்ளார். 70 வயதைக் கடந்தவர். வயது, உடல் பலஹீனம், மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் என்று படுத்த படுக்கையாக உள்ளார். அவருக்கு சாப்பாடு தருவது, தேவையான உதவிகளைச் செய்வது என்று நான் பார்த்துக் கொள்கிறேன். என் வயது 25. தற்போது எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல ஆரோக்கியமாகவே உள்ளேன். ஆனால், காசநோய் பற்றி இணையத்தில் படித்தபோது, சற்று அச்சமாக உள்ளது. இந்தத் தொற்று எனக்கும் வந்துவிடுமோ என்கிற பயம் இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு பாதிப்பு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?எம்.பிரசாந்த், சேலம்பலவிதமான வைரஸ் தொற்றுகளைப் போன்று, நோய் பாதித்தவரிடமிருந்து, அவர்கள் அருகில் இருந்தால் தொற்றிவிடும் நோய் அல்ல காசநோய். நோய் பாதித்தவர் தும்மும்போதும், இருமும்போதும், சளி, எச்சில் மூலம் கிருமிகள் காற்றில் பரவி, மற்றவர்களைத் தொற்றுகிறது. கிருமி, நம் உடலுக்குள் சென்றாலும், உடனடியாக நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும் வரை, உடலுக்குள் சென்ற கிருமி அப்படியே துாங்கிக் கொண்டு வெளியில் தெரியாமல் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, காசநோய் பாதிப்பு வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. வழக்கம்போல ஆரோக்கியமாகவே இருக்கிறீர்கள் எனும்போது, எந்த டெஸ்டும் தற்போது எடுக்க வேண்டாம். ஒருவேளை மாலை வேளைகளில் காய்ச்சல், பசியின்மை, இருமல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல் இருந்தால், அப்போது கண்டிப்பாக காசநோய்க்கான பரிசோதனை அவசியம். 'டாட்ஸ்' என்ற நேரடி காசநோய் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தபிறகு, தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மருந்து சாப்பிட வேண்டும். இதனால், காசநோயாளிகளின் தினப்படி வாழ்க்கையில், எந்த மாற்றமும் இருக்காது. மருந்தை சாப்பிட்டுக் கொண்டே அவர்கள் தங்களின் அன்றாட வேலைகளைச் செய்யலாம். நோயாளி பயன்படுத்தும் பொருட்களை முடிந்தவரை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அவர் பயன்படுத்தியவற்றை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் அருகில் சென்று தேவைகளை கவனிக்க வேண்டியிருப்பதால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். சளி, எச்சில் துப்பும்போது கவனமாக இருக்கச் சொல்லுங்கள். அந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்துவிட வேண்டும். நோயாளியின் அருகில் செல்லும்போது, சுத்தமான துணியால், வாய், மூக்கை மூடிக் கொள்வதும் அவசியம். வீட்டில் வைத்து முறையாக பராமரித்தால், காசநோய் பரவாது. சிலர் காசநோய் என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு துரத்திவிடுகின்றனர். முறையான மருத்துவ சிகிச்சையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால்தான், காசநோய் பரவுகிறது. நீங்கள் பரவாயில்லை. மருந்து, மாத்திரைகளை சரியாகக் கொடுத்து கவனித்துக் கொள்கிறீர்கள். காசநோய் என்று தெரிந்த உடனேயே, பாதிக்கப்பட்டவர்களை கைவிட்டு விடுகின்றனர்; வீட்டில் தங்கவே அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களால் தான், நோய் பரவும் அபாயம் அதிகம். கைவிடப்பட்டவர்களை பராமரிப்பதற்காகவே, அரசு காசநோய் சானிட்டோரியங்களைத் திறந்தது. ஆறு மாதங்களிலிருந்து, ஒன்பது மாதங்கள் வரை, இவர்களை உள் நோயாளிகளாக வைத்திருந்து, மருந்து, சத்தான உணவு கொடுத்து பராமரிக்க வசதியாக இருந்தது. ஆனால், தற்போது பல இடங்களில், காசநோய் சானிட்டோரியங்களை அரசு மூடிவிட்டது. டாக்டர் வி.பி.துரைகாசநோய் சிறப்பு மருத்துவர், நாகர்கோவில்