உறவு மேலாண்மை: நான் ஒரு ஏ.டி.எம்., மிஷின்
என் பெயர் சரளா. 1983ம் ஆண்டு பிறந்தேன். அம்மா, அப்பா, அண்ணனோடு சென்னையில் தான் வளர்ந்தேன். மிக மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் என்னுடையது. நான் ரொம்பவே அமைதியான பெண். பெரியவர்களை மதிக்க வேண்டும்; எது செய்யவும் யாரையும் வற்புறுத்தக் கூடாது போன்ற விஷயங்கள் குழந்தைபருவத்திலிருந்தே மனதில் பதிந்து விட்டது. பிடித்ததைச் செய்ய அனுமதித்த பெற்றோர், இயற்கை, இசை, என, ரசனையோடு இருந்தது என் பள்ளி, கல்லூரிப் பருவம். ஒரு பன்னாட்டு கம்பெனியில் கை நிறைய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். என்னுடைய, 24ம் வயதில் வரன் தேடிய பெற்றோர், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பிரவீனை தேர்வு செய்தனர். 2009 ஜூன் மாதம் நிச்சயம் செய்து, ஆகஸ்டில் திருமணம். 50 சவரன் நகை மற்றும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். மகிழ்ச்சியாக, பல கனவுகளோடு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தேன். முதல் நாள் இரவு, சிறிது நேரம் பொதுவாகப் பேசிய பின் தூங்கிவிட்டோம். இரண்டு வாரங்கள் கழித்து, கொடைக்கானல் போனோம். வெளியில் சுற்றுவது, சாப்பிட்டு தூங்குவது என, போனது எங்களது ஹனிமூன். இருவரும், வழக்கம் போல அலுவலகம் செல்ல ஆரம்பித்தோம். நான் நெருக்கமாக இருக்க முயற்சி செய்தால் விலகிவிடுவார். மாமனாரும் மாமியாரும் உதவி செய்வர் என, நினைத்தேன். அவர்கள், எங்களை பற்றி கவலையே படாமல், என் பணத்திலேயே குறியாக இருந்தனர். என்னை ஒரு, ஏ.டி.எம்., மிஷினாகவே பார்த்தனர். நாங்கள், ஒரே அறையில், நண்பர்கள் போல இருந்தோம். ஏன் இப்படி இருக்கிறார், அடுத்து என்ன, செய்வது என, தெரியவில்லை; ஆனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படியாவது அவரிடம் உள்ள தயக்கத்தைப் போக்கி, சேர்ந்து வாழ விரும்பினேன். கணவரின் நடத்தை, எனக்குள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் திருமணத்திற்கு முன்பே, லோன் வாங்கி வீடு கட்டியிருப்பதால், வீட்டுக்கடன் முடியும் வரை, குழந்தை வேண்டாமென, என் மாமியார், மகனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அதனால் இவர், வீட்டிலிருக்கும் நேரங்களில் அம்மாவுடன் பேசுவது, 'டிவி' பார்ப்பது என, அம்மா பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், 2011 அக்டோபர், கோவையில் ஒரு மீட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்றார். திரும்பி வரும் வரை, என்னை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். ஒரு மாதம் கழித்து, அலுவலகம் சென்று விசாரித்ததில், அப்படி ஒரு டிரைனிங்கே இல்லை என்றும், அவர் அலுவலகம் வருவதாகவும் சொல்ல, அவர் வீட்டிற்கு சென்று பார்த்தால் எதுவுமே நடக்காதது போல, அம்மாவுடன் இருந்தார். திரும்பிப் பார்த்தால், என் திருமண வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை. அடிப்படையில், என் கணவர் நல்லவர். எப்படியாவது அவரை மாற்றி அவருடன் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.டாக்டர் அட்வைஸ்ஒரு புத்திசாலியான, கண்ணியமான பெண்ணின் திருமண வாழ்க்கை, சுயநலமான மாமியார், அம்மாவையே சுற்றும் பையனால் இப்படி ஆகிவிட்டது. அவள் வாழ்க்கையை அவள் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையை அவர் எதிர்கொள்வதற்கு தேவையான சுய ஹிப்னாசிஸ் பயிற்சியை அளித்தேன்.டாக்டர் பீட்டர் பெர்னாண்டஸ்மனநல சிறப்பு மருத்துவர்044 - 2252 0249, 2252 1120