வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும் ஸ்ட்ரெஸ்!
வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் இல்லாதவர்கள் குறைவு என்ற நிலை வந்து விட்டது. உணவு குழாய் முடிந்து, வயிறு ஆரம்பிக்கும் இடத்தில் வரும், 'பெப்டிக் அல்சர்' பொதுவானது. இந்த பகுதியில் இருக்கும், 'மியூக்கஸ்' எனப்படும் சவ்வில் அரிப்பு ஏற்படுவதால் பெப்டிக் அல்சர் வருகிறது.சாப்பிடும் உணவு அமிலத்துடன் சேர்ந்து, மேல் நோக்கி வந்து அரிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பல பிரச்னைகள் வரும். இரைப்பையில் ஏற்படும் அரிப்பால் ஏற்படுவது, 'டியோடினல் அல்சர்!' ஒருவருக்கே இந்த இரண்டு அல்சரும் வரலாம்.அல்சர் வருவதற்கு முக்கிய காரணம், 'எச் - பைலோரை' என்ற பாக்டீரியா தொற்று. சாப்பிடும் உணவிலிருந்தே இந்தத் தொற்று வருகிறது. கெட்டுப்போன, புளித்த உணவை சாப்பிடுவதால் தொற்று வரலாம். இது தவிர, காற்று ஏற்றப்பட்ட பானங்கள், குறிப்பிட்ட உடல் பிரச்னைகளுக்கு நீண்ட நாட்களாக எடுத்துக் கொள்ளும் மருந்து அல்லது வலி நிவாரணி மாத்திரைகள், அல்சரை உண்டாக்கலாம். இவை எல்லாவற்றையும் விட பிரதான காரணம், 'ஸ்ட்ரெஸ்!' இயல்பாகவே ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கும். இத்துடன் சேர்த்து, ஜீரண என்சைம்களும் சுரக்கும். சரியான நேரத்தில் உணவு சாப்பிடாதது, மன அழுத்தம் இவற்றால் இந்த அமிலத் தன்மை அதிகரிக்கும். இரைப்பையில் உணவு இல்லை என்றால், ஜீரண அமிலம், மியூக்கஸ் அடுக்கை அரித்து புண்ணாக்கி விடும். மன அழுத்தம் இருந்தால் துாக்கம் வராது. துாக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம் வரும். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. ஸ்ட்ரெஸ் தொடர்ந்து இருந்தால், அமில சுரப்பும் அதிகம் இருக்கும்.இரைப்பை அல்சர் இருந்தால், சாப்பிட்ட உடன் வலி வரும். சமயங்களில் இந்த வலி இரண்டு மணி நேரம் நீடிக்கலாம் அல்லது மூன்று மணி நேரம் கழித்தும் வரலாம். வாந்தி, உடல் எடை குறைவது, வாந்தியில் ரத்தக் கசிவும் வரலாம்.பெப்டிக் அல்சர் இருந்தால், சாப்பிடும் முன் வலி வரும். மேல் வயிற்றில் எரிச்சல் இருக்கும். சாப்பிட்டவுடன் வலி சரியாகிவிடும். தவறான உணவுப் பழக்கம், துரித உணவு இதற்கு முக்கிய காரணம். ரத்த நாளங்களில் செல்கள் அசாதாரணமாக இருப்பது, குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது, கழிவுகள் அதிகம் தங்குவது போன்றவற்றை இயற்கை மருத்துவத்தில் சரி செய்ய முடியும். அதன் பின், உணவியல் மாற்றம் செய்யும் போது, எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கழிவுகள் உடலில் தங்காது. மலச்சிக்கல் இருந்தால், சாப்பிட்டும் உணவு சரியாக செரிமானம் ஆகாது. அமிலச் சுரப்பு அதிகமாகும். மலச்சிக்கலை சரி செய்து, மன அழுத்தத்தை சீராக்கினால், பிரச்னை சரியாகி விடும்.டாக்டர் என்.தினகரன் செரிமான மண்டல சிறப்பு மருத்துவர்,சென்னை