சர்க்கரை குறைபாடா... கவலை வேண்டாம்!
சர்க்கரை நோய், இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. அனைவரும் பயப்படும் அளவுக்கு, அப்படி ஒன்றும் இது ஒரு நோய் அல்ல; குறைபாடுதான். இதனை உணவு முறை கொண்டு, கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த குறைபாட்டுக்கு தீர்வு காண, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.இந்தியர் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். டாக்டர் மற்றும் உணவியல் வல்லுனர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகள் பற்றி பார்ப்போம்.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி., தண்ணீரில், இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறுநாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த, 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை, அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனுடன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள்ளவும்.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் 2 முறை பால் குடிப்பது நல்லது.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை, உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகை காய்கறிகள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளூக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழங்களை சாப்பிடலாம். மாம்பழம், வாழை மற்றும் திராட்சை பழங்களில், சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதால், இதை அதிகமாக உண்ணக் கூடாது.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால், ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு உயர வாய்ப்புள்ளது. அதனால் சிறிய அளவு உணவை, போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.